தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினைச் சிறப்பாக செயல்படுத்தும் மாவட்டங்களுக்கு தேசிய அளவிலான விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 3 விருதுகள் கிடைத்துள்ளது என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2007-08 ஆம் ஆண்டிற்கான விருதுகளைப் பெற 13 மாநிலங்களைச் சார்ந்த 22 மாவட்டங்களை தேர்வு செய்து மத்திய அரசு நேற்று (29ஆம் தேதி) அறிவித்துள்ளது. இந்த விருதுகளைப் பெறும் மாவட்டங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களான திண்டுக்கல், சிவகங்கை, கடலூர் ஆகியவை பெற்றுள்ளன. (இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் 612 மாவட்டங்கள் உள்ளன).
இந்த விருதுகள் வழங்கும் விழா புதுடெல்லியில் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற உள்ளது. விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 22 மாவட்டங்களுக்கிடையே வரிசை நிர்ணயிக்கப்படவில்லை (சூடி iவேநச-ளந சயமேiபே). தற்போது, மத்திய அரசு மாவட்டங்களுக்கு மட்டுமே தேசிய அளவிலான விருதுகளை அறிவித்துள்ளது. மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கும் திட்டம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே 3 மாவட்டங்களுக்கு விருதுகளைப் பெற்றுள்ளன. ஆந்திர பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தலா 2 மாவட்டங்களுக்கு விருதுகளைப் பெற்றுள்ளன.
இமாசலப் பிரதேசம், கேரளா, பஞ்சாப், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தலா 1 மாவட்டத்திற்கு மட்டுமே விருதுகளைப் பெற்றுள்ளன. தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்ட 3 மாவட்டங்களுமே மத்திய அரசால் விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை தேசிய அளவில் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்பதை இது உறுதி செய்கிறது என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.