தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது கேரம் விளையாட்டு சாம்பியன் இளவழகி, சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
உலக சீனியர் 'கேரம்' விளையாட்டு சாம்பியன் பட்டம் வென்ற இளவழகி, சென்னை மாநகர காவல்துறை அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், நான் சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், சாமந்திப்பூ காலனியில் வசித்து வருகிறேன். நான் தேசிய அளவில் 'கேரம்' விளையாட்டு போட்டியில் முதல் இடத்தை பெற்றுள்ளேன். பிரான்ஸ் நாட்டில் உலக அளவில் நடந்த போட்டியிலும் உலக சீனியர் கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளேன்.
சாம்பியன் பட்டம் பெற்ற பிறகு கடந்த 2.3.2008 அன்று ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தினர் என்னை அணுகி, உலக மகளிர் தினத்தையொட்டி பேட்டி கண்டனர். அந்த பேட்டியை அவர்களுடைய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதாக கூறினார்கள். இதற்காக என்னை பல கோணங்களில் நிறுத்தி படம் பிடித்தனர். உலக மகளிர் தினத்தையொட்டி நான் பேட்டி கொடுத்தேன்.
இந்த நிலையில், நான் பேட்டி கொடுத்த நிகழ்ச்சி 'பெப்சி' குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத்தில் வெளியிடப்பட்டது. கிரிக்கெட் வீரர் டோனி நடித்துள்ள விளம்பர காட்சியோடு, நான் பேட்டி கொடுத்த நிகழ்ச்சியையும் இணைத்து விளம்பரமாக வெளியிட்டுவிட்டார்கள். இதை பார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்தினர் என்னை ஏமாற்றிவிட்டனர். இதுபற்றி அந்த தொலைக்காட்சி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் பதில் அளிக்கவில்லை. நான் கொடுத்த பேட்டியை வர்த்தக ரீதியாக முறைகேடாக பயன்படுத்தி ரூ.1 கோடிக்கு மேல் சம்பாதித்துவிட்டார்கள்.
என்னை ஏமாற்றி, எனது பேட்டியை தவறாக பயன்படுத்திய சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும், 'பெப்சி' குளிர்பான நிறுவனத்தின் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.