கச்சத் தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தி விட்டு மீன்களை அள்ளிச் சென்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 620 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் வலை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த இடத்தை விட்டு செல்லுமாறு எச்சரிக்கை செய்து 20-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றிவளைத்தனர்.
பின்னர் மீனவர்களை துடுப்புகளால் சரமாரியாக தாக்கியும், வலைகளை அறுத்து கடலில் வீசினர். மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்களையும் எடுத்து சென்று விட்டனர்.
உயிர் பிழைத்தால் போதும் என்ற பயத்தில் கரை திரும்பிய மீனவர்கள், நடந்த நிகழ்வுகளை பற்றி தங்கள் குடும்பத்தினரிடம் கூறினர். இது தொடர்பாக மீனவர்கள் எந்தவித புகாரும் செய்யவில்லை.
இலங்கை கடற்படையினர் தாக்குதலுக்கு உள்ளான படகுகளின் சேத மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி 3ஆம் தேதி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் தற்போது 2வது தடவையாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.