கடம்பூர் மலைப்பகுதியில் மனுநீதிநாள்
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியில் வருவாய்துறை சார்பாக மனுநீதிநாள் முகாம் நடந்தது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து கடம்பூர் மலைப்பகுதியில் உள்ளது குத்தியாலத்தூர். இங்கு வருவாய் துறை சார்பாக மனுநீதிநாள் முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு கோபி ஆர்.டி.ஓ. மகேஸ்வரன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சத்தியமங்கலம் தாசில்தார் சிவசுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.
குத்தியாலத்தூர் மற்றும் குன்றி பஞ்சாயத்து தலைவர்கள் முன்னிலை வகித்தனர். முகாமில் அறுபது நபர்களுக்கு ரூ.4.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய ஆர்.டி.ஓ. மகேஸ்வரன், பழங்குடியினருக்கு நலவாரியத்தில் உறுப்பினராக சேர தேவையான ஜாதி சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றார்.
முகாமில் தோட்டக்கலைத்துறை சார்பாக எட்டு நபர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முடிவில் மண்டல துணை தாசில்தார் முத்துசாமி நன்றி கூறினார். முகாமில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.