சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இன்று (19ஆம் தேதி) முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
3 ஆண்டு சட்டப்படிப்பிற்கான 1-வது, 2-வது, 3-வது ஆண்டு வகுப்புகள் மற்றும் 5 ஆண்டு சட்டக்கல்விக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று காலை 9 மணி முதல் நடைபெறும் என்றும் 5 ஆண்டு படிப்பிற்கான 2-வது ஆண்டு முதல் 5-வது ஆண்டு வரை உள்ள வகுப்புகள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளன என்றும் கூறியுள்ளார்.
அடையாள அட்டை உள்ள கல்லூரி மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள கல்லூரி முதல்வர், கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் அரசியல், சாதி, மதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சுவரொட்டி ஒட்டுதல், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தல் ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.