இலங்கையில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தவில்லை என்றும், ஜெயலலிதா உண்மை நிலை தெரியாமல் பேசுகிறார் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் குற்றம்சாற்றியுள்ளார்.
இதுகுறித்துச் சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "போர் வந்தால் சிலர் சாகத்தான் செய்வார்கள் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். விடுதலைப் புலிகள் இலங்கைத் தமிழர்களைக் கவசமாக பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர்களிடம் இருந்து தமிழர்களைக் காக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அப்பாவி மக்களைக் கொல்லும் எண்ணம் சிங்கள ராணுவத்துக்கு இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அவ்வாறு அவர் கூறியிருந்தால் அது தவறு. நாங்கள் ஒரு வேண்டுகோளை வைக்கிறோம். நடுநிலையாளர்கள் 4 தமிழர்களை முல்லைத்தீவு, கிளிநொச்சிக்கு அனுப்பி வரச் செய்து அங்குள்ள தமிழர்களைப் பேட்டி எடுத்து வரட்டும். விடுதலைப் புலிகள் கேடயமாக தமிழ் மக்களை பயன்படுத்தினார்கள் என்று கூறினால் நாங்கள் எங்கள் நிலைகளை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். விடுதலைப் புலிகளை எதிர்த்து போராட்டம் நடத்தவும் நாங்கள் தயார். எனவே உண்மை நிலை தெரியாமல் பேசக்கூடாது.
திருமாவளவன் உண்ணாவிரதம் திட்டமிட்ட நாடகம் என ஜெயலலிதா கூறுவது அவருடைய கருத்து" என்றார்.
சிவசங்கர் மேனன் பயணம் பற்றிக் கூறுகையில், "இந்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் போர் நிறுத்தம் பற்றிப் பேச இலங்கைக்கு வரவில்லை என்றும் மத்திய அரசு போர் நிறுத்தம் பற்றிப் பேசச் சொல்லவில்லை என்றும் கூறியிருக்கிறார். முல்லைத் தீவில் தமிழர்கள் மீது மும்முனைத் தாக்குதல் நடத்தப்படும் வேளையில் இவ்வாறு அவர் கூறுவது இந்திய தமிழ் மக்களை அவமதிப்பது போல் ஆகும்" என்றார் அவர்.
23இல் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியும் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக போராட்டம் நடத்துகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டமும் கூடியது. இதற்கும் மேலாக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றி இருக்கிறோம். டிசம்பர் 4ஆம் தேதி பிரதமரை அனைத்துக் கட்சி சார்பில் டெல்லிக்கு சென்று பார்த்தோம். இதற்குப் பிறகும் மத்திய அரசு போர் நிறுத்தம் குறித்து எதுவுமே செய்யவில்லை என்ற தா. பாண்டியன், வருகிற 23ஆம் தேதி மத்திய அரசைக் கண்டித்துத் தமிழ்நாட்டில் அனைத்து நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதிக்குக் கேள்வி
மேலும், தமிழக முதலமைச்சர் இலங்கைப் பிரச்சனைக்காக தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக சொல்லியிருக்கிறார். அவர் என்ன தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். இதற்கு முன்பு தி.மு.க. ஆட்சியில் இல்லை. ஆனால் இப்போது ஆட்சியில் சரிபாதி தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் உள்ளன. இவர்களால் ஏன் இலங்கைப் பிரச்சனையில் தீர்வு காண முடியவில்லை. முக்கிய முடிவுகள் எடுக்கும் மத்திய அமைச்சரவைக் கேபினட்டில் தி.மு.க., பா.ம.க. உள்பட பல கட்சிகள் உள்ளன. இலங்கைப் பிரச்சனை பற்றிப் பேச ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்று ஏன் இவர்கள் சொல்லவில்லை" என்று தா.பாண்டியன் கேள்வி எழுப்பினார்.