இலங்கை இனப் படுகொலையை இந்தியா கண்டுகொள்ளவில்லை: வைகோ
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
இலங்கையில் நடக்கும் இனப் படுகொலையை இந்தியா கண்டுகொள்ளவில்லை, இதனால்தான் அங்கு தமிழர்களை கொன்று குவிக்கிறார்கள் என ம.தி.மு.க. பொதுசெயலர் வைகோ குற்றம் சாற்றியுள்ளார்.ஈரோடு மாவட்ட ம.தி.மு.க. நிதி வழங்கும் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி தலைமை தாங்கினார்.
கட்சியின் பொதுசெயலளர் வைகோ கலந்துகொண்டு பேசுகையில், இலங்கையில் அப்பாவி தமிழர்களை அந்த அரசு இரக்கமில்லாமல் கொன்று குவிக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா அரசு இலங்கை அரசுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்து வருகிறது. இதனால்தான் இலங்கை தமிழர்களுக்கு இந்த அளவு பாதிப்பு ஏற்பட்டள்ளது. ஆனால் இவர்களால் விடுதலைப்புலிகளை வெல்லமுடியாது.
மத்திய அரசு கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிகளும் இந்த மோசமான நிலையை கண்டுகொள்ளவில்லை. ஹிட்லர் ஆட்சியில் நடந்த கொடுமை இலங்கை தமிழர்களுக்கு நடக்கிறது. இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இது தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது. இதைத்தான் இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் பேசினர். இதில் என்ன தவறு.
விடுதலைப்புலிகள் முல்லைதீவில் உள்ள ஆறு லட்சம் தமிழர்களுக்கு அரணாக உள்ளனர். அவர்களை வீழ்த்த முடியாது. ராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட உணவு செரிக்கும் நாளாகும் என்று வைகோ பேசினார்.