நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தியதாக காவல்துறை உதவி ஆய்வாளர் உள்பட 46 காவலர்களிடம் விளக்கம் கேட்டு புதுச்சேரி காவல்துறை தலைமை இயக்குனர் ஏ.கே. வர்மா தாக்கீது அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை காவல்துறை உதவி ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றத்தில் பிணை கிடைக்காததால் காவலர்கள் கடந்த மாதம் 9ஆம் தேதி நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி.) கான் மாற்றப்பட்டு புதிய காவல்துறை தலைமை இயக்குனராக ஏ.கே.வர்மா நியமிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து நீதிமன்றத்தில் போராட்டம் நடத்திய காவலர்களை கண்டறிய காரைக்கால் காவல்துறை கண்காணிப்பாளர் சிந்துபிள்ளை தலைமையில் ஒரு ஆணையத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வர்மா நியமித்தார்.
அந்த ஆணையமும் போராட்டம் நடந்த போது எடுத்த வீடியோ ஆதாரங்களை வைத்து உதவி ஆய்வாளர் ஒருவர் உள்பட 46 காவலர்களின் பட்டியலை தயாரித்தது. இந்த பட்டியலை டி.ஜி.பி. வர்மாவிடம் காவல்துறை கண்காணிப்பாளர் சிந்துபிள்ளை சமர்ப்பித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தியது தொடர்பாக விளக்கம் கேட்டு அவர்களுக்கு நேற்றிரவு தாக்கீது அனுப்பப்பட்டது. இதற்கான உத்தரவை காவல்துறை தலைமை இயக்குனர் ஏ.கே.வர்மா உத்தரவின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் பிறப்பித்துள்ளார்.