சாதி மதங்களின் பெயரால் தீவிரவாதச் செயல்கள் எந்தவொரு பகுதியிலும் தலையெடுப்பதை முற்றிலும் தடுத்திடுவோம் எனும் உணர்வோடு 2009-ஆம் ஆண்டினை வரவேற்போம் என்று முதலமைச்சர் கருணாநிதி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி இன்று தெரிவித்துள்ள ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், புத்தாண்டு 2009 பிறக்கிறது! “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்பதைக் கொள்கை நெறியாக நமக்கு வகுத்துத் தந்த மாமேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நூற்றாண்டில் மலர்கிறது, இந்தப் புத்தாண்டு!
2006-ஆம் ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை புதிய வரிவிதிப்பு எதுவுமின்றி, ஏராளமான வரிச்சலுகைகளுடன்; விவசாயிகளின் துயர்தீர 7000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி; நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு இலவச நிலம்; சத்துணவுடன் வாரம் மூன்றுமுறை முட்டைகள், வாழைப்பழங்கள்; கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய்; ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 20 ஆயிரம் ரூபாய்;
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்; எரிவாயு இணைப்புடன் இலவச அடுப்புகள், ஏழைத் தொழிலாளர் நலம் பெற அமைப்புசாரா நல வாரியங்கள் முதலான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டம்; கிராமப்புற மக்களின் அவசர மருத்துவ உதவிக்கு நடமாடும் மருத்துவக்குழு ஊர்திகள் திட்டம்; பள்ளிச்சிறார் இருதயநோய் அறுவை சிகிச்சைத் திட்டம்; அரசுப் பணியாளர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்! 385 ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்களுக்கும் வாகனங்கள்!
மானிய விலையில் 10 மளிகைப் பொருள்கள்! தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம்! தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம்! தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம்! தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்! அருந்ததியர்க்கு தனி உள் இடஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை! எனும் புதிய திட்டங்களையும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர் அனைவரும் பலன் பெற்றிடும் வகையில் நடைமுறைப்படுத்திய 2008 ஆம் ஆண்டு ''தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள்” எனச் சட்டம் இயற்றித் தந்த வரலாற்றுப் பெருமையோடு விடை பெற; தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழாவைச் சீரோடும் சிறப்போடும் கொண்டாடுவதற்கு, சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கத் தேவையான பச்சரிசி, வெல்லம் முதலிய பொருள்களை எல்லோர்க்கும் வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கி வைப்பதுடன், ஏழை எளியோர்க்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி 2009 புத்தாண்டு மலர்கிறது!
இந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டுத் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் உரித்தாகுக! சாதி மதங்களின் பெயரால் தீவிரவாதச் செயல்கள் எந்தவொரு பகுதியிலும் தலையெடுப்பதை முற்றிலும் தடுத்திடுவோம் எனும் உணர்வோடு 2009-ஆம் ஆண்டினை வரவேற்போம்!
சமத்துவம், சமுதாய நல்லிணக்கம், மதச் சார்பின்மை, அரசியல் சமூக அறிவியல் பொருளாதார நிலைகளில் தமிழகம் நிலையான, வலுவான முன்னேற்றம் காண அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என இந்தத் திருநாளில் உறுதியேற்போமாக என்று முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.