சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் இன்று தொடர் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
தென்னிந்திய மாநிலங்கள் பயன்பெறும் வகையில், உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள திறமையான வழக்கறிஞர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்.
வக்கீல் சேமநல நிதியை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாட்களில் நீதிமன்றத்தை புறக்கணிக்க தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றங்களைப் புறக்கணித்துவிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த வேலை நிறுத்தம் 31ஆம் தேதி வரை நீடிக்கிறது.