''திருமங்கலம் இடைத்தேர்தல் அமைதியாக நடக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா, தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க.வினர், தோல்வி பயத்தால் கலகங்களில் இறங்கியுள்ளனர்.
அ.இ.அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பணியில் ஈடுபட்ட அ.இ.அ.தி.மு.க.வை சேர்ந்த ரவி, இந்திய கம்யூனிஸ்டை சேர்ந்த பொன்னையா ஆகிய இருவரையும், மதுரை முன்னாள் துணை மேயர் மிசா.பாண்டியன் ஒரு கும்பலோடு வந்து தாக்கியுள்ளார். இதில் இருவரும் வெட்டுக்காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருமங்கலம் தொகுதியில் 20க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவங்களை தடுக்காமல், காவல் துறையினர் பார்வையாளர்களாகவே இருப்பது வருந்தத்தக்கது. தேர்தல் சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.