காங்கிரஸ் கட்சியின் 124ஆம் ஆண்டு தொடக்க விழாவை காங்கிரஸ் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி டிசம்பர் 28ஆம் தேதி 124ஆம் வயதை எட்டுகிற நாள். உலக அரசியல் அரங்கில் நீண்ட நெடிய தியாக வரலாற்றையும், இந்தியாவில் மட்டுமல்லாது, வேறு எந்நாட்டு அரசியல் கட்சியிலும் இல்லாத வகையில் அதிக உறுப்பினர் எண்ணிக்கையையும் கொண்டு நிலைத்த புகழ் பெற்ற மூத்த பேரியக்கம் இது.
மகாத்மா காந்தியின் அஹிம்சா நெறி முதல் பிரதமர் பண்டித நேருவின் 5 ஆண்டு திட்டம், அணிசேரா சர்வதேச கொள்கை, இந்திரா காந்தியின் வறுமையை ஒழிப்போம், பசுமை புரட்சி ராஜீவ்காந்தி தொடங்கி வைத்த விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் காலத்தின் புதிய பொருளாதார கொள்கை ஆகியவை இந்தியாவின் அற்புத சாதனைகள்.
சோனியா காந்தி வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உலக புகழின் உச்சியில் நின்று பெருமைப்பட்டு திகழ்கிறது. இப்பெருமைகளோடு ராகுல்காந்தி காங்கிரஸ் பேரியக்க வரலாற்றின் தொடர்ச்சி என்பதையும் மக்களுக்கு நினைவுறுத்தவது காங்கிரஸ் சகோதர, சகோதரிகளின் பெரும் பொறுப்பாகும்.
எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்ட, நகர, வட்டார, கிராம அமைப்புகளின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் 124ஆம் ஆண்டு தொடக்க விழாவை வரும் 28ஆம் தேதி சிறப்பாக கொண்டாட கேட்டுக்கொள்கிறேன்" என்று தங்கபாலு கூறியுள்ளார்.