தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குறை கூறியுள்ளார்.
ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை தமிழக அரசு உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றுவது குறித்து மத்திய அரசு யோசிக்க வேண்டி வரும் என்று கூறினார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்துவது, கட்டபஞ்சாயத்து, வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறித்தப் போன்றவற்றுக்காக கட்சி நடத்திவரும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை தமிழக அரசு உடனே கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மதுரையில் பத்திரிக்கையாளர்களை கொலை செய்த போதும், சென்னையில் சட்டகல்லுõரி மாணவர்கள் மோதிய போதும் காவல்துறைனர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததைப் போலவே, சென்னையில் சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டபோதும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தததாக இளங்கோவன் குறைகூறினார்.
அஇஅதிமுக ஆட்சியில் விடுதலைப்புலிகளை ஆதரித்து யாரும் பேசமுடியாது. விடுதலைப் புலிகள் விஷயத்தில் அதிமுக, காங்கிரஸ் கட்சியோடு ஒருமித்த கருத்தைக் கொண்டிருப்பதை தாம் பலமுறை கூறியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டுவருவதை போர் என்று கூறுவது தவறு. மும்பையில் பயங்கரவாதிகள் நடத்தியது போல் இலங்கையில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி வருவதாகக் குறைகூடிய ஈவிகேஎஸ். இளங்கோவன், தேவைப்பட்டால் தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்றார்.