யானை மிதித்து பெண் சாவு
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு மாவட்டம் கோபி அருகே யானை மிதித்து பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ளது பங்களாபுதூர். இங்கு வசிப்பவர் ராஜேஸ்வரி (45). இவர் தன் கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனியாக வசித்து வந்தார். இவர் ஆடுகள் வைத்துக்கொண்டு அருகில் இருக்கும் வனப்பகுதியில் மேய்த்து பிழப்பு நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் அருகில் உள்ள வனப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்ற ராஜேஸ்வரி வீடு திரும்பவில்லை. ஆனால் ஆடுகள் வீட்டிற்கு வந்துவிட்டது.
இதனால் பதறிய உறவினர்கள் வனப்பகுதிக்குள் ராஜேஸ்வரியை தேடி சென்றனர். அப்போது மாதையன் கோவில் அருகே தலை, உடல் நசுங்கிய நிலையில் ராஜேஸ்வரி இறந்து கிடந்தார்.
காட்டு யானை மிதித்து ராஜேஸ்வரி இறந்தது தெரியவந்தது. இது குறித்து பங்களாபுதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.