வேலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 9 சிறுவர்கள் நேற்றிரவு தப்பினர். அவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இரவு சாப்பாட்டு நேரம் முடித்ததும் இரவு 8.15 மணி முதல் 8.30 மணி வரை, அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு முன்பு உள்ள வராண்டாவில் நிற்பதற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இதேபோல் நேற்றிரவு சாப்பாட்டுக்கு பிறகு அங்குள்ள வராண்டாவில் சிறுவர் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் வராண்டாவின் மேல்கூரையில் உள்ள ஒரு இரும்புகம்பியை உடைத்துள்ளான்.
இதைத் தொடர்ந்து அந்த வழியாக 9 சிறுவர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர், வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து, தப்பிச்சென்ற சிறுவர்கள் மாயகிருஷ்ணன், வெங்கடேஷ், சுரேஷ், ஜெயகுமார், பிரபாகரன், சுரேஷ்குமார், ஐயப்பன், பாஷாபாய், மணிகண்டன் ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் அவர்கள் வேலூரை விட்டு எங்கும் செல்லாமல் இருக்க பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.