Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா.ம.க.வுடன் கூட்டணியைத் தொடர முடியாது: தி.மு.க. முடிவு!

பா.ம.க.வுடன் கூட்டணியைத் தொடர முடியாது: தி.மு.க. முடிவு!
, செவ்வாய், 17 ஜூன் 2008 (19:46 IST)
பாட்டாளி மக்கள் கட்சியுடனான கூட்டணியை இதற்கு மேலும் தொடர முடியாது என்று தி.மு.க. உயர் நிலைக் குழு முடிவெடுத்து அறிவித்துள்ளது.

தி.மு.க. - பா.ம.க. இடையே தொடர்ந்து நடந்தவந்த கருத்து மோதல் இரு கட்சிகளுக்கு இடையே பெரும் பிரச்சனையாக உருவெடுத்த நிலையில் தி.மு.க. உயர் நிலைக் குழுக் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு. கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பின்னர் செய்தியாளர்களிடம் படித்துக் காட்டிய கருணாநிதி, இந்த அளவிற்கு கேவலப்படுத்தப்பட்ட பின்னரும் பா.ம.க.வுடன் கூட்டணியை தொடர முடியாது என்று கூறினார்.

“தி.மு.க. தலைமையைப் பற்றி பா.ம.க.வைச் சேர்ந்த குரு பேசிய வன்முறைப் பேச்சிற்காக அக்கட்சியின் தலைமை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலும், தி.மு.க.வினரை அப்படிப் பேசியது தவறு, அப்படிப் பேசக் கூடாது என்று கூறி, அதற்காக மன்னிப்போ வருத்தமோ கேட்காத நிலையிலும், தொடர்ந்து இப்படி கேவலப்படுத்துபவர்களோடு உறவை நீடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களையும் இணைத்துக் கொண்டு தொடர்ந்து செயல்பட முடியாது என்பதை மிகவும் வருத்தத்துடன் தி.மு.க. உயர்நிலைக் குழுக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறத” என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கருணாநிதி படித்துக் காட்டினார்.

பா.ம.க. தலைவர் இராமதாஸ் விடுத்துவரும் அறிக்கைகள் குறித்தும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை கருணாநிதி படித்துக் காட்டினார்.

“தி.மு.க. ஆட்சியின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எதிர்ப்பதும், விமர்சனம் செய்து அறிக்கை விடுவதும், ஆட்சியின் நடவடிக்கைகளை கிண்டலாகவும் கேவலமாகவுத் சித்தரித்து அதன் மூலம் சிறுமைபடுத்த முயற்சிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி.மு.க. உயர் நிலைக் குழுவின் இத்தீர்மானத்தின் மூலம் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தி.மு.க. - பா.ம.க. கூட்டணி முறிந்துவிட்டது. இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் பா.ம.க. தொடர்ந்து நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil