Publish Date: Sat, 19 Apr 2008 (16:03 IST)
Updated Date: Sat, 19 Apr 2008 (16:03 IST)
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் பயறு வகைகளை மியான்மார் (பர்மா) நாட்டிலிருந்தும், பாமாயிலை மலேசியா போன்ற நாடுகளிலிருந்தம் நேரடியாக இறக்குமதி செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் நிதித்துறை செயலர், உணவுத் துறைச் செயலர், வேளாண்மைத்துறை செயலர், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சமையல் எண்ணெய், அரிசி இருப்பு வைப்பதில் சில்லறை மற்றும் மொத்த வணிகத்திற்கு உடனடியாக வரம்புகள் நிர்ணயிக்கப்படும்.
கோதுமை, கோதுமை மாவு, பயறு வகைகளுக்கு மொத்த மற்றும் சில்லறை வணிகர்களுக்கு இருப்பு வைக்க உள்ள வரம்புகள் தீவிரமாக அமல்படுத்தப்படும். இதனால் மொத்த வணிகத்தில் கோதுமை 100 டன்னுக்கும், பயறு வகைகள் 250 டன்னுக்கும் அதிகமாக இருப்பு வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல சில்லறை வணிகர்களுக்கு கோதுமை 3.125 டன்னுக்கு அதிகமாகவும் பயறு வகைகள் 6.25 டன்னுக்கு அதிகமாகவும் இருப்பு வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
துவரம் பருப்பு போன்ற பயறு வகைகள், பாமாயில் ஆகியவற்றின் உற்பத்தி இந்தியாவில் குறைவாக இருப்பதால், தமிழகத்தின் தேவையை நிறைவேற்ற பயறு வகைகளை மியான்மார் (பர்மா) நாட்டிலிருந்தும், பாமாயிலை மலேசியா போன்ற நாடுகளிலிருந்தம் நேரடியாக தமிழக அரசே இறக்குமதி செய்ய உணவு வழங்கல்துறை ஆணையர் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழுவினை 24.4.2008 அன்று பர்மா மற்றும் மலேசியா நாடுகளுக்கு அரசு அனுப்பி வைக்கும்.
பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் கோதுமையை தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து வழங்கவும் ரவை, மைதா போன்ற பொருட்களை சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் தொடர்ந்து வழங்கவும் தேவைப்படும் கோதுமையை நுகர்பொருள் வாணிபக் கழகமே பஞ்சாப் போன்ற மாநிலங்களிலிருந்து நேரடியாக வாங்கி விநியோகம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.
உணவு பொருட்கள் பதுக்கப்பட்டாலோ, வெளி மாநிலங்களுக்கு கடத்தப் பட்டாலோ அவற்றை தடுக்க உணவு வழங்கல் துறை மற்றும் குடிமை பொருள் குற்றப் புலனாய்வுத் துறை மூலமாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
மாநில அளவில் தலைமைச் செயலரின் தலைமையில் விலைவாசி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு வாரந்தோறும் கூடி ஆய்வு செய்து அவ்வப்போது உள்ள விலை நிலவரத்திற்கேற்ப அத்தியாவசியப் பொருட்களின் தேவை மற்றும் கிடைக்கின்ற அளவை அறிந்து பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக வெளி மாநிலங்களிலிருந்து பருவகாலங்களில் கொள்முதல் செய்து இருப்பு வைப்பதுடன் நியாய விலையில் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
துவரம் பருப்பு பற்றாக்குறையை ஈடுகட்ட ஒரு மாற்றுத் தீர்வாக கனடா நாட்டிலிருந்து சமையல் பருப்பை இறக்குமதி செய்து பரீட்சார்த்த முறையில் குறைந்த விலையில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறப்பு பொது விநியோகித் திட்டத்தின் மூலம் தற்போது வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை மாவு, ரவை, மைதா போன்றவை தொடர்ந்து வழங்கப்படும்.
நீண்ட காலத் தீர்வாக, தமிழ்நாட்டில் நெல் உற்பத்தித் திறனை, செம்மை நெல் சாகுபடி முறையைப் பரவலாக்கி அதிகரிக்கவும், பயறு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியைப் பெருக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.