”ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை பிரச்சனையாக்குபவர்களை உதைக்காமல் என்ன செய்வது'' என்று நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக கேட்டார்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட அமைப்பினரை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் இன்று தமிழ்த்திரையுலகத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
இது ஒரு விழா அல்ல, ஒரு சந்திப்பு. ஜனங்க மத்தியில மதிப்பு வாங்குவது கஷ்டம். அதிகமாக பேசினாலும் சரி, குறைவாக பேசினாலும் சரி மரியாதை வாங்குவது ரொம்ப கஷ்டம். இந்த சம்பவம் மனசுக்கு மிகவும் வேதனையாக, கஷ்டமாக இருகிறது. கர்நாடகாவில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டிக்கிறேன்.
நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது. கவர்னர், சுப்ரீம் கோர்ட் சொல்லியும் கேட்ட மாட்டேன் என்கிறார்கள். பிறகு யார் சொன்னா கேட்கிறேன் என்கிறார்கள்.
ஒரு நிலத்துக்கு பட்டா சரி இல்லானா கூட போலீஸ்காரன் உதைப்பான். ஒகேனக்கல் கர்நாடகாவுக்கு சொந்தம் என்கிறார்கள். 10 வருடத்திற்கு முன்னால் போட்ட ஒப்பந்தம் இத்திட்டம். ஒகேனக்கல் தமிழகத்திற்கு சொந்தம். நம்ம தண்ணீரை நாம எடுக்கக் கூடாதுன்னு சொல்பவனை ஏன் உதைக்க்க் கூடாது?
வாட்டாள் நாகராஜன் ஒரு மேட்டரே கிடையாது!
எனக்கு வருத்தம் என்னன்னா, ஒரு தேசிய கட்சி அதுவும் அந்த மாநிலத்தின் மிகப்பெரிய தலைவர் அவரு வந்து தூண்டி விடுகிறார். என்ன கேவலம் பாருங்க. வாட்டாள் நாகராஜனை விட்டுவிடுங்க. அது ஒரு மேட்டரே கிடையாது.
இதற்குக் காரணம் கலைஞர் என்கிறார் எஸ்.எம். கிருஷ்ணா. சத்தியத்த பேசுங்க, உண்மைய பேசுங்க, சுய நினைவோடு பேசுங்க. உண்மை, சத்தியம், நாணயம் என்னைக்கும் சோரு போடும், காப்பாற்றும்.
தேவகவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா, எடியூரப்பா, கலைஞரை கேட்டுக் கொள்கிறேன். காவிரி மாதிரி பிரச்சனையை வளர்த்து விடாதீர்கள். அறிவோடு செயல்படுங்கள்.
கலைஞருக்கு மட்டும் எல்லோருடைய சார்பிலும் வேண்டுகோள். இதைவிட பெரிய பிரச்சனை வேறு எதுவும் கிடையாது. இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும். பெரிய பிரச்சனை ஆவதற்குள் முற்றி புள்ளி வையுங்கள் என்று எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று ரஜினிகாந்த் கூறினார்.