ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட் பந்தை வீசாமல் விட்டு எறிகிறார், அதனால்தான் மணிக்கு 160கிமீ வேகத்தில் அவரால் வீசமுடிகிறது என்று நியூஸீலாந்து அணித் தலைவர் டேனியல் வெட்டோரி கூறிய கருத்து புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நியூசீலாந்து அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடந்த இருபதுக்கு 20 போட்டியில் டெய்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, படு வேகமான பந்துகளை வீசினார். இதனையடுத்து நியூஸீலாந்து அணித் தலைவர் வெட்டோரி, பயிற்சியாளர் பிரேஸ்வெல் ஆகியோர் டெய்ட்டின் பந்து வீசும் முறை மீது சந்தேகங்களை எழுப்பினர்.
நியூஸீலாந்தின் இந்த குற்றச்சாட்டிற்கு கடும் கோபமடைந்துள்ள ஷான் டெய்ட், பரிசோதனைக்கு செல்லத் தயார், ஆனால் அவர்கள் எனது பந்துகளை மேலும் கவனமாக கவனிப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.
ஆனால் ஆட்ட நடுவர் ரோஷன் மஹானாமா இது பற்றி கூறுகையில், இது வரை நியூஸீலாந்து அணி நிர்வாகம் டெய்ட் மீது அதிகாரபூர்வ புகார் எதையும் அளிக்கவில்லை என்றார்.
மேலும் இன்னமும் 3 ஒரு நாள் சர்வதேச போட்டிகள் நடைபெறுகிறது, அதில் டெய்ட்டின் பந்து வீச்சு முறையை பார்த்து விட்டு அதன் பிறகு நடைமுறையில் உள்ள விதிகளின் படி இந்த விவகாரம் கவனிக்கப்படும் என்று கூறியுள்ளார் மஹாணாமா.
ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜேம்ஸ் சதர்லேண்ட், ஷான் டெய்ட் பந்து வீச்சு முறை குறித்த இது போன்ற புகாரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன், இது குறித்து கவலைப்பட ஒன்றும் இல்லை, ஆனால் ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஏற்கனவே கோபக்காரராக இருப்பார், அவரை மேலும் இது போன்று சீண்டிப்பார்ப்பது தேவையில்லாத விஷயம்" என்று கூறியுள்ளார்.