Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக மம்தா பேச்சு: நாடாளுமன்றத்தில் அமளி

மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக மம்தா பேச்சு: நாடாளுமன்றத்தில் அமளி
புதுடெல்லி , செவ்வாய், 10 ஆகஸ்ட் 2010 (13:44 IST)
லால்கார் பேரணியில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து குறித்து, நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பிய பா.ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டன.

மேற்குவங்க மாநிலம் லால்கரில் "பயங்கரவாதத்திற்கு எதிரான தளம்" என்ற பெயரில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் கலந்துகொண்டு பேசிய மம்தா,மாவோயிஸ்டுகள் வன்முறையை கைவிட்டுவிட்டு, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் கடந்தமாதம் ஆந்திரபிரதேசத்தில் மாவோயிஸ்டு செய்தி தொடர்பாளர் செர்குரி ராஜ்குமார் என்ற ஆஸாத் காவதுறையினரால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.கடந்த ஜூலை 2 ஆம் தேதியன்று காவல்துறையினர் ஆஸாத்தை பிடித்து வைத்து, என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக்கொன்றதாக மாவோயிஸ்டுகள் உற்றம்சாற்றியிருந்த நிலையில், அதே கருத்தை மம்தா நேற்று வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் மக்களவையில் இன்று இது தொடர்பாக பிரச்சனை எழுப்பிய பா.ஜனதா மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இப்பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு, பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரினர்.

இது தொடர்பாக மக்களவை பா.ஜனதா துணை தலைவர் கோபிநாத் முண்டேவுக்கும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதிப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சுதிப் பேசுகையில் பா.ஜனதாவும்,இடதுசாரிகளும் கூட்டணி அமைத்துக்கொண்டதாக குற்றம்சாற்றினார்.

அவர் மேலும் கூறுகையில், அனைத்துவிதமான வன்முறைகளையும் தமது கட்சித் தலைவர் மம்தா எதிர்ப்பதாகவும், மாவோயிஸ்டுகள் பிரச்சனையை தீர்க்க மம்தா மேற்கொண்டுள்ள புதிய முயற்சிக்கு மத்திய அரசு மட்டுமல்லாது, அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

அதே சமயம் இப்பிரச்சனையில்,நடப்பதை பொறுத்திருந்து பார்க்கும் உத்தியை கடைபிடித்தது காங்கிரஸ் கட்சி.அக்கட்சியின் மூத்த தலைவரும், நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி,இப்பிரச்சனையில் மம்தாவின் நிலை என்ன என்பது குறித்து தாம் அவரை தொடர்புகொண்டு கேட்க உள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே மாநிலங்களவையிலும் இதே பிரச்சனை காரணமாக அமளி ஏற்பட்டு, பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil