தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 3ஆவது வாரத்தில் நிறைவடைய உள்ள நிலையில், அதற்கு முன்பாக தேர்தலை நடத்தி முடிப்பது குறித்து மத்திய தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து புதுடெல்லியில் நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி தலைமையில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும், யூனியன் பிரேதேசத்தைச் சேர்ந்த தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தம், மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கு தேவைப்படும் ஊழியர்கள், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், சுமூகமாக தேர்தலை நடத்தி முடிப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே மாநில மற்றும் தேசிய அளவிலான அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் கடந்த செவ்வாயன்று ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.