டெல்லி மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் 42 இடங்களில் வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். பா.ஜ.க. 23 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இதேபோல மிசோரம் மாநிலத்திலும் காங்கிரஸ் 32 இடங்களுடன் தனிப் பெரும்பன்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ராஜீந்தர் நகர் தொகுதியைத் தவிர 69 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 69 இடங்களிலும் காங்கிரஸ் போட்டியிட்டது. 68 இடங்களிலில் பா.ஜ.க. போட்டியிட்டது.
இதில் காங்கிரஸ் 42 இடங்களிலும், பா.ஜ.க. 23 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும் மற்றவர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக முதல்வர் பதவியில் இருந்து வரும் ஷீலா தீக்ஷித் 39,747 வாக்குகளைப் பெற்றுத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் விஜய் ஜோலியை 14,078 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெறும் ஷீலா தீக்ஷித், இந்த முறை தொகுதி வரையறைக்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட புது டெல்லி தொகுதியில் போட்டியிட்டார்.
வி.கே. மல்ஹோத்ரா வெற்றி!
பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் வி.கே. மல்ஹோத்ரா தான் போட்டியிட்ட கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் 11,218 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
மாட்டியா மஹால் தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சியும், கோகுல்புரி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியும் வெற்றிபெற்றுள்ளன.
அதிர்ச்சியில் பா.ஜ.க.!
காங்கிரசின் வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், தான் மிகுந்த அதிர்ச்சி கலந்த வியப்படைந்துள்ளதாக கூறியுள்ளார்.
பா.ஜ.க. வின் தோல்விக்குத் தான் முழுமையான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அக்கட்சியின் பொதுச் செயலர் அருண் ஜெய்ட்லி கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் 47 தொகுதிகளிலும், பா.ஜ.க. 20 தொகுதிகளிலும், மற்றவை 3 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மிசோரம் மாநிலத்திலும் வெற்றி!
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2 தேர்தல்களில் அந்த கட்சி தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடத்தி வந்தது. இந்த தடவை அந்த கட்சிக்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கடும் சவாலை கொடுத்தது. இதனால் மிசோரம் மாநிலமும் காங்கிரஸ் வசம் வந்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு தனித்து ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை. இன்று மதியம் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மை பலத்தை மிக, மிக எளிதாக எட்டியது.
காங்கிரஸ் கட்சி 32 இடங்களிலும், மிசோ தேசிய முன்னணி 3 இடங்களிலும், மற்றவர்கள் 5 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.