எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா சென்ற விரைவு ரயில் ஆந்திர மாநிலம் லக்காவரம் அருகே இன்று அதிகாலை தடம்புரண்டது. இதில் 15 பயணிகள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் கிழக்கு கடற்கரை ரயில்வே பிரிவுக்கு உட்பட்ட ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சோம்பேட்டா-பருவா நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள லக்காவரத்தில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் ரயில் விபத்துக்கு உள்ளானது. இதில் ரயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டன.
இதில் அதிகளவில் காயமடைந்த பீகார், ஒரிசா மாநில பயணிகள் சோம்பேட்டா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பாட்னா செல்லும் பயணிகளின் நலன் கருதி சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் இதர பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ரயில் தடம்புரண்டதன் காரணமாக விசாகப்பட்டிணம்-புவனேஷ்வர் இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.