தங்களது 26 வார காலக் கருவைக் கலைப்பதற்கு அனுமதியளிக்கக் கோரி ஒரு தம்பதியினர் தாக்கல் செய்திருந்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மும்பையைச் சேர்ந்த நிகிதா - ஹர்ஷா மேஹ்தா தம்பதியினர் தங்களது மருத்துவர் நிகில் ததாருடன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
நிகிதாவின் வயிற்றில் வளரும் கருவின் இதயத்தில் ஓட்டை இருப்பது 24 ஆவது வாரத்தில் நடந்த மருத்துவச் சோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து அதனைக் கலைத்துவிட நிகிதா- ஹர்ஷா மேஹ்தா தம்பதியினர் முடிவு செய்தனர். ஆனால் அதற்குச் சட்டம் இடம் கொடுக்கவில்லை.
நிகிதாவின் வயிற்றில் இருக்கும் கருவை மருத்துவக் குழுவினர் பரிசோதித்து அளித்த அறிக்கையில், குழந்தை இதயக் கோளாறுடன் பிறக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர்.
எனவே எங்கள் குழந்தை அவதிப்படுவதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. எத்தனைதான் அரசும் மற்றவர்களும் குழந்தைக்கு உதவி செய்தாலும் அது குழந்தையின் வாழ்க்கையை முழுமைப்படுத்தாது.
மருத்துவ ரீதியிலான கருத்தடைச் சட்டத்தின் மூலம் 20 வாரங்களுக்கு உட்பட்ட கருவைத்தான் கலைக்க முடியும். அதற்கு மேற்பட்ட வாரங்களைக் கடந்த கருவை, தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் தவிர கலைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே இந்தச் சட்டத்தில் இருந்து எங்களுக்கு விதிவிலக்கு அளித்து, கருவைக் கலைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு நிகிதா- ஹர்ஷா மேஹ்தா தம்பதியினர் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.
இதுகுறித்து நிகிதா சிகிச்சை பெற்று வரும் ஜெ.ஜெ. மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கமளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து மருத்துவர்கள் தாக்கல் செய்த பதில் மனுவில், ஆய்வுகளின்படி குழந்தை இதயக் குறையுடன் பிறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அப்படியே பிறந்தாலும் பேஸ்மேக்கர் கருவி மூலம் வழக்கமான வாழ்க்கையை அந்தக் குழந்தையால் வாழ முடியும். எனவே இதனை கலைக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதற்குப் பதிலளித்த நிகிதா- ஹர்ஷா மேஹ்தா தம்பதியினர், "குழந்தை பிறந்த உடனேயே அதற்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு, அதன் உதவியாலேயே அது உயிர் வாழ வேண்டிய ஒரு கடினமான நிலை உள்ளது. மேலும் அதன் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும்.
பேஸ்மேக்கர் சிகிச்சை அளிக்க சுமார் 1 லட்சம் செலவாகும். பேஸ்மேக்கர் கருவியை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எங்களால் பொருளாதார ரீதியில் அது இயலாத காரியம்" என்றனர்.
வழக்கின் இறுதியில் தீர்ப்பளித்த கூடுதல் அமர்வு நீதிபதிகள் ஆர்.எஸ். காண்டேபர்கர், அம்ஜத் சையத் ஆகியோர், "குழந்தை ஊனத்துடன்தான் பிறக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அதற்கான வாய்ப்புகள் குறைவு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குழந்தை ஊனத்துடன்தான் பிறக்கும் என்பதற்கான மருத்துவ ஆதாரங்களை குழந்தையின் பெற்றோர் தாக்கல் செய்யவில்லை. எனவே பெற்றோரின் கோரிக்கையை ஏற்க முடியாது" என்று தீர்ப்பளித்தனர்.