Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல், டீசல் விலையேற்றம் : பிரதமருடன் முரளி தியோரா சந்திப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றம் : பிரதமருடன் முரளி தியோரா சந்திப்பு!
, செவ்வாய், 27 மே 2008 (19:49 IST)
கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்பை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலைகளை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று பிரதமரைச் சந்தித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா வலியுறுத்தியுள்ளார்.

கச்சா விலையேற்றத்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த நிதியாண்டில் ரூ,2,25,000 கோடி இழப்பு ஏற்படும் என்றும், எண்ணெய் பத்திரங்கள் மற்றும் எண்ணெய் கண்டுபிடிப்பு - உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களிடமிருந்து பெறும் நிதியிலிருந்து இந்த இழப்பை சந்திப்பது சாத்தியமில்லை என்று பிரதமரிடம் அமைச்சர் முரளி தியோரா கூறியதாக அரசு வட்டாரங்கள் கூறியதென பி.டி.ஐ. செய்தி தெரிவிக்கிறது.

“எண்ணெய் பத்திரங்கள் வாயிலாக ரூ.35,000 கோடியும், எண்ணெய் கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிடமிருந்து மேலும் ரூ.30,000 கோடி பெறுவதினாலும், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் ரூ.15,000 கோடி இழப்பை ஏற்றுக்கொண்டாலும், அதற்குப் பிறகும் ரூ.1,45,000 கோடி துண்டு விழும் நிலையில் அதனை தீர்வைகளைக் குறைத்தும், விலைகளை ஏற்றியும்தான் ஈடுகட்ட முடியும” என்று பிரதமரிடம் முரளி தியோரா கூறியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த தியோராவிடம், செய்தியாளர்கள் விவரம் கேட்டு வினவியதற்கு, “நான் சொல்வதற்கு ஏதுமில்லை” என்று கூறிவிட்டு சென்றவிட்டதாக அச்செய்தி தெரிவிக்கின்றது.

இன்று காலை நிதியமைச்சர் சிதம்பரத்தை முரளி தியோரா சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சா விலையேற்றத்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றிற்கு ஏற்படும் ரூ.580 கோடி இழப்பை ஈடுகட்ட, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5ம், சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தவும் பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil