இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடையேயான பேச்சுவார்த்தையை தொடங்க பயங்கரவாத பிரச்னையை தொடர்புபடுத்துவதில்லை என்று இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
பாகிஸ்தானுடன் இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டுமானால் , மும்பை தாக்குதல் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மண்ணிலிருந்து தூண்டிவிடப்படும் தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு , இந்தியா இதுவரை நிபந்தனை விதித்து வந்தது.
இந்நிலையில் , எகிப்தின் ஷாம் எல்-ஷேக் நகரில் நடைபெறும் அணி சேரா நாடுகளின் 15 ஆவது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகிய இருவரும் இன்று சந்தித்துப் பேசுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இரு தலைவர்களும் இன்று சந்தித்துப் பேசினார்கள்.இந்த பேச்சுவார்தையின்போது , மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிலானியை மன்மோகன் வலியுறுத்தினார்.
அதனை கிலானியும் ஏற்றுக்கொண்டு , மும்பை தாக்குதல் குற்றவாளிகள் நீதியின் முன்பாக நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.
இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.அதில், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடையேயான பேச்சுவார்த்தையை தொடங்க பயங்கரவாத பிரச்னையை தொடர்புபடுத்துவதில்லை என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை துவக்க பயங்கரவாத பிரச்னையை இந்தியா ஒரு நிபந்தனையாக முன்வைத்து வந்த நிலையில் , தற்போது தனது அந்த நிலையை இந்தியா திடீரென மாற்றிக் கொண்டிருப்பது மேற்கூறிய கூட்டறிக்கையில் வெளிப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடம்பெற்றுள்ள துணைக் கண்டத்திற்கு பயங்கரவாதம் ஒரு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பதை இரு நாடுகளும் ஒப்புக்கொள்வதாகவும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் எந்தவொரு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் ஏற்பட்டாலும் , அது தொடர்பாக தகுந்த நேரத்தில் உண்மையான மற்றும் செயல்படத்தக்க தகவல்களை பரிமாறிக்கொள்வது என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இரு நாடுகளின் உறவினால் ஏற்படும் முழு பயன்களை உணர்ந்து கொள்வதற்கு தடையாக இருக்கும் காரணிகளை அழிப்பது மற்றும் இருநாடுகளிடையே பரஸ்பரம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான சூழலை உருவாக்கும் காரியங்களை செய்வது என்று மன்மோகன் மற்றும் கிலானி ஆகியோர் ஒப்புக்கொண்டதாகவும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.