இலங்கையில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 'புலிகளின் குரல்' வானொலி நிலையத்தின் மீது சிறிலங்க விமானப் படையினர் நடத்திய தாக்குதல் 'நியாயமற்றது' என்று யுனெஸ்கோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
''ஜெனீவா விதிகளின்படி, பொதுமக்களுக்கு தகவல்களை வழங்கும் பொது ஊடகங்கள், அவை வெளியிடும் கருத்துக்கள் எந்த வகையாக இருந்தாலும், அதன் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கு அனுமதியில்லை.
ஊடகத் துறையினரையும், ஊடகங்களையும், பொதுமக்கள் சார்ந்தவையாகவே கருத வேண்டும் என்று ஜெனீவா விதி கூறுகின்றது. எனவே, "புலிகளின் குரல்" வானொலி நிலையம் மீதான தாக்குதலை சிறிலங்க அரசு எந்த விதத்திலும் நியாயப்படுத்த வாய்ப்பில்லை.
இத்தகைய தாக்குதல்கள், ஊடகத் துறை சார்ந்தோர் படுகொலைகள் ஆகிய எதுவும் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்விற்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. எனவே, அடிப்படை மனித உரிமை, கருத்துச் சுதந்திரத்திற்கு அரசு அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும்'' என்று யுனெஸ்கோ அமைப்பின் தலைமை இயக்குநர் கூச்சிரோ மத்சூரா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி வடக்கு இலங்கையில் கிளிநொச்சி நகருக்கு அருகில் உள்ள 'புலிகளின் குரல்' வானொலி நிலையத்தின் மீது சிறிலங்க விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் நிலைய ஊழியர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.