அமெரிக்கா உள்ளிட்ட அயல் நாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்று நமது நாட்டில் அமைக்கப்படவுள்ள அணு மின் நிலையங்களில் விபத்து ஏதும் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு வழங்குவதை முறைபடுத்தும் அணு விபத்து இழப்பீடு சட்ட வரைவு நமது நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்னும் சில நாட்களில் நிறைவேறிவிடும் என்று நிச்சயமாக நம்பலாம்.
ஏனென்றால், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாரதிய ஜனதா கட்சியின் (நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள முக்கிய எதிர்க்கட்சி) தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி ஆகியோரை அழைத்துப் பேசியுள்ளார். அவர்களும் தங்கள் பங்கிற்கு ஒரு குறைந்தபட்ச யோசனையை கூறிவிட்டு, சட்ட வரைவை நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளதாக இன்று காலைச் செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில்தான், இந்த அணு விபத்து இழப்பீடு சட்ட வரைவு (மசோதா) குறித்து ‘ஆராய்ந்த’ நாடாளுமன்ற நிலைக் குழு அளித்த அறிக்கை (Parliament standing committee) , இன்று காலை இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் நாடாளுமன்ற நிலைக்குழு சில ஆலோசனைகளையும் தந்துள்ளது. அணு உலை விபத்து ஏற்பட்டால், அந்த அணு உலையை இயக்கும் நிர்வாக அமைப்பு ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றுள்ளதை, ரூ.1,500 கோடியாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்த பாரதிய ஜனதா தலைவர்கள், அணு உலை விபத்து இழப்பீடு சட்ட வரைவில், அணு உலைகளை விற்கும் அந்நிய நிறுவனங்களையும் பொறுப்பாக்க வேண்டும் என்று யோசனை கூறியதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் எந்த அளவிற்கு அவர்களை பொறுப்பாக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறியுள்ளனர் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை. ஆக இந்த நாட்டின் ஆளும் கூட்டணியும் முக்கிய எதிர்க்கட்சியும் அணு விபத்து இழப்பீடு சட்ட வரைவை நிறைவேற்ற முடிவு செய்துவிட்டன. நமது கேள்வியெல்லாம் (ஏற்கனவே இதே பகுதியில் எழுதிய கட்டுரையிலும் கேட்டுள்ளோம்) அணு உலை விபத்து ஏற்படும் நிலையில் ரூ.1,500 கோடி இழப்பீடு போதுமானதா? இதனை நிறைவேற்ற மன்மோகன் அரசு இத்தனை அவசரம் காட்டும் அவசியமென்ன? என்பதே.அமெரிக்காவின் இழப்பீடு சட்டம் - ஒரு ஒப்பீடுபோபால் விஷ வாயு விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட சட்டச் சிக்கல் குறித்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு நமது அரசு ஒரு அமைச்சரவைக் குழுவை நியமித்து ஆராய்ந்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 இலட்சம் இழப்பீடு அளிப்பது என்றும், பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு மறுவாழ்வு பெற உதவுவது என்றும் பரிந்துரை செய்துள்ளது. போபால் நகரத்தை நரகமாக்கிய யூனியன் கார்பைட் கம்பெனியில் இருந்து வெளியேறிய மிக் என்று அழைக்கப்படும் மீதைல் ஐசோசயனைட் வாயு ஒரு இரவில் 15,000 பேரைக் கொன்றது (மத்தியப் பிரதேச அரசுக் கணக்கு 3,787), பல பத்தாயிரக்கணக்கானவர்கள் பார்வையிழந்தனர்.
இப்படி ஒரு விஷ வாயு விபத்திற்கே நெருக்கமாக மக்கள் வாழும் நமது நாட்டில் இத்தனை ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றால், அணு உலை விபத்து ஏற்பட்டால் எந்த அளவிற்கு உயிரிழப்பும், இதர பாதிப்புகளும் ஏற்படும் என்று இந்தச் சட்டத்தை நிறைவேற்றத் துடிப்பவர்கள் எண்ணிப்பார்த்தார்களா என்று தெரியவில்லை (ஒருவேளை அணு விபத்து என்று நிகழ்ந்தால் அந்த இடத்தில் யார் மிஞ்சப்போகிறார்கள் இழப்பீடு வழங்குவதற்கு என்று யோசித்திருப்பார்களோ?). முதன் முதலில் அமெரிக்காவில் அணு உலை விபத்து இழப்பீடு சட்டம் நிறைவேற்றப்பட்டபோது கூட, 60 மில்லியன் டாலர்கள் தான் அணு சகதி மையத்தை இயக்கும் நிறுவனத்திற்கான இழப்பீடு பொறுப்பாக நிர்ணியிக்கப்பட்டுள்ளது (1957ஆம் நிறைவேற்றப்பட்ட பிரைஸ் - ஆண்டர்சன் சட்டம்). ஆனால் 1984ஆம் ஆண்டு நிகழ்ந்த (இரஷ்யாவின்) செர்னோபில் அணு மின் உலை விபத்திற்குப் பிறகுதான், இழப்பீடு தொடர்பான தீவிர விவாதம் சர்வதேச அளவில் உருவாகி, அதன் அடிப்படையில் அணு விபத்து இழப்பீடு தொடர்பான இரண்டு சட்டங்களை பன்னாட்டு அணு சக்தி முகமை (IAEA) உருவாக்கியுள்ளது. இதன் அடிப்படையில்தான், அணு உலை விபத்து ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ‘அணு விபத்து கூடுதல் இழப்பீடு உடன்படிக்கை’ (Convention on Supplementary Compensation for Nuclear Damage 1997) நடைமுறைக்கு வந்தது. இந்த உடன்படிக்கையே, அணு உலை விபத்து ஏற்பட்டால் அந்த அணு உலையை இயக்கும் நிறுவனம் அதிகபட்சமாக 465 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு அளித்தால் போதுமானது என்று வரையறை நிர்ணயித்தது. இதை அடிப்படையாகக் கொண்டுதான், மன்மோகன் சிங் அரசும், அணு உலையை இயக்கும் நிறுவனம் (இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய அணு சக்திக் கழகம் - NPCIL) ரூ.500 கோடி கொடுத்தால் போதுமானது என்றும், கூடுதல் இழப்பீட்டை அரசு அளிக்கும் என்றும் கூறி இந்த சட்ட வரைவைத் தயாரித்தது. இதன் மூலம் அணு உலையை விற்கும் நிறுவனங்கள் இழப்பீடு பொறுப்பில் இருந்து முழுமையாக தவிர்க்கப்பட்டன!
பன்னாட்டு அணு சக்தி முகமை (ஐஏஇஏ) உருவாக்கிய அணு விபத்து கூடுதல் இழப்பீடு உடன்படிக்கை நடைமுறைக்கு வந்த பிறகு, 2005ஆம் ஆண்டில், அதுவரை நடைமுறையில் இருந்த பிரைஸ் - ஆண்டர்சன் சட்டத்தை திருத்திய அமெரிக்க அரசு, அணு உலையை இயக்கும் நிறுவனத்தின் இழப்பீட்டுப் பொறுப்பை வெறும் 60 மில்லியன் டாலரில் இருந்ததை 10,761 மில்லியன் டாலராக உயர்த்தியது! இது அந்த நாட்டு அரசு தனது நாட்டு மக்கள் நலனில் கொண்ட அக்கறை. ஆனால் அதே நாடு தனது நாட்டின் அணுத் தொழில்நுட்ப நிறுவனங்களின் வணிக நலனைக் காக்க, மற்ற நாடுகள் மீது பன்னாட்டு அணு சக்தி முகமை உருவாக்கிய கூடுதல் இழப்பீடு உடன்படிக்கைக்குள் இழுத்துவிடுகிறது. அதற்காகத்தான் அணு விபத்து இழப்பீடு சட்டத்தை நிறைவேற்றுமாறு இந்தியாவை வற்புறுத்துகிறது. இப்படி ஒரு சட்டத்தை உள்நாட்டில் நிறைவேற்றினால் மட்டுமே அந்த நாடு, பன்னாட்டு அணு சக்தி முகமை உருவாக்கியுள்ள பன்னாட்டு கூடுதல் இழப்பீடு உடன்படிக்கையின் கீழ் உறுப்பினராக முடியும். அதன் மூலம் அணு உலை விபத்து ஏற்படும் போது அந்த அணு உலையை இயக்கும் நிறுவனம் அளித்த இழப்பீடு போக, மீத இழப்பீட்டிற்கு இந்த பன்னாட்டு அமைப்பை அணுகலாம். ஆனால் அணு உலைகளை விற்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு எந்த இழப்பீடு பொறுப்பும் இருக்காது. இதற்குத்தான் மன்மோகன் அரசும், அதற்கு எதிர்க்கட்சியாக உள்ள பாரதிய ஜனதாவும் கூட்டணி சேர்ந்து அமெரிக்காவிற்கு உதவுகின்றன. இந்திய அணு சக்தித் துறையில் இருந்தவர்களே இந்த விவரங்களையெல்லாம் கொடுத்து ஊடகங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
இதுவரை இப்படியொரு சட்டத்தை நிறைவேற்றாதது ஏன்?
இப்படிப்பட்ட அணு விபத்து இழப்பீடு சட்டம் இந்திய மக்களுக்கு உதவவே நிறைவேற்றப்படுகிறது என்று அரசு கூறுவது உண்மையானால், 1969ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒன்று இரண்டல்ல, 25க்கும் அதிகமான அணு உலைகளை இயக்கிவரும் நமது நாடு ஏன் அப்படிப்பட்ட சட்டத்தை நிறைவேற்றவில்லை? என்று கேட்டு, அதற்கு பதிலும் சொல்கிறார்கள். ஏனென்றால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை. இந்தியாவின் அணு உலைகளின் பாதுகாப்பை அந்த அளவிற்கு ஏஇஆர்சி என்றழைக்கப்படும் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் (Atomic Energy Regulatory Commission - AERC) தனது சீரிய நடவடிக்கைகளின் மூலம் உறுதி செய்து வருகிறது. எனவே நமக்கல்ல, அமெரிக்காவிற்கு (மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும்தான்) உதவ இப்படிப்பட்ட சட்டம் தேவைப்படுகிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, அடுத்த 40 ஆண்டுக் காலத்தில் தனது அணு மின் சக்தி உற்பத்தியை 50 ஆயிரம் மெகா வாட்டிற்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ள இந்திய நாடு, தனது நாட்டின் அணு உலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு மாபெரும் சந்தை. ஒன்றல்ல, இரண்டல்ல... 10க்கும் மேற்பட்ட அணு உலைகளுக்கான ஒப்பந்தத்தைப் பெறும் என்று கூறுகிறார்கள். அதனால்தான் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், இந்திய - அமெரிக்க இராஜதந்திர கூட்டாண்மை ஒப்பந்தம் என்று ஒன்றன் பின் ஒன்றாக கையெழுத்திடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒப்பந்தங்களின் துவக்கம்தான் 2005ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கும், ஜார்ஜ் புஷ்ஷும் விடுத்த கூட்டறிக்கையாகும்.அமெரிக்காவின் அதிபராக ஜார்ஜ் புஷ் இருந்தபோது அந்நாட்டு அயலுறவுச் செயலராக இருந்த கோண்டலிசா ரைஸ், தனது பதவிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் இந்தியா வந்திருந்தார். அவரது பயண நோக்கம் என்னவென்று கேட்டபோது, இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க நிறுவனங்களுக்கு எத்தனை அணு உலைகளுக்கான ஒப்பந்தங்களை இந்திய அரசு தரப்போகிறது என்பதை உறுதி செய்துக்கொள்ள வந்தேன். இது முழுமையாக ஒரு வணிகப் பயணமே என்று கூறிவிட்டுச் சென்றார்! இந்த உறவை மேலும் மேம்படுத்தி, வலுப்படுத்தவே அணு விபத்து இழப்பீடு மசோதாவை நிறைவேற்ற ஆளும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உழைக்கின்றன! அமெரிக்க மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒபாமா
அமெரிக்க நிறுவன நலன்களைப் பேண நமது நாட்டு அரசு இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் அயல் நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து பணியாற்றிடும் தொழில் நெறிஞர்களுக்கு அளிக்கப்படும் ஹெச் 1பி, எல் 1 விசாக்களுக்கான கட்டணத்தை உயர்த்தும் சட்ட வரைவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கு தனது கையெழுத்தையிட்டு இசைவளித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா! இதனால் அமெரிக்காவில் இயங்கும் இந்திய நிறுவனங்களுக்கு ஆண்டொன்றுக்கு 200 மில்லியன் டாலர் அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்று இந்திய தொழில் கூட்டமைப்புகள் கூறுகின்றன. அமெரிக்காவிற்கு வந்து பணியாற்றும் இந்திய தொழில் நெறிஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மையே என்று அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் மார்க் டோனர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆயினும் அமெரிக்கர்களின் நலன் கருதி ஒபாமா இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கிறார். இங்குதான் இந்தியர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசும் இல்லை, தலைவர்களும் இல்லை.