Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை சந்தேகமே

Advertiesment
ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை சந்தேகமே
புது டெல்லி: , வியாழன், 22 ஜனவரி 2009 (13:17 IST)
ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவு சலுகையை மத்திய அரசு அளிக்காது என்று தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயத்த ஆடை, பின்னலாடை, விரிப்புக்கள் போன்ற அதிக அளவு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பொருட்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது.

ஏற்றுமதி தொழிலில் உள்ள நெருக்கடிக்கு தீர்வு காண, மத்திய அரசு, ஏற்றுமதி வருவாய்க்கு வரி கட்டுவதை குறிப்பிட்ட காலத்திற்கு நீக்க வேண்டும்.

ஏற்றுமதியாளர்கள் கட்டிய வரியை, அரசு திரும்ப வழங்கும் அளவை அதிகரிக்க வேண்டும். வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை இரண்டு வருடங்களுக்கு திருப்பி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 26 ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள், எட்டு பண்டக சந்தையின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு, மத்திய வர்த்தக-தொழில் துறை அமைச்சர் கமல்நாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த ஆண்டு 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட முடியாது. இது குறித்து அரசு பரிசீலிக்கும். அடுத்த 10 முதல் 12 நாட்களுக்கு பிறகு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அவரிடம் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் சிறப்பு உதவி அறிவிப்பு இருக்குமா? என்று கேட்டதற்கு, சிறப்பு சலுகை என்று ஒன்று இல்லை. சில விதிமுறைகள் உள்ளன. சில பிரச்சனைகள் உள்ளன என்று பதிலளித்தார். அதே நேரத்தில் கமல்நாத் சில துறைகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு கடனுக்கான வட்டியில் சலுகை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். (ஏற்றுமதியாளர்களுக்கு வங்கிகளில் வழங்கும் கடனுக்கு, மற்றவர்களை விட, வட்டி குறிப்பிட்ட விழுக்காடு குறைவாக வசூலிக்கப்படுகிறது)
தற்போது குறிப்பிட்ட ஏற்றுமதி துறைக்கு வட்டியில் 2 விழுக்காடு சலுகை வழங்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் திட்ட குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, மத்திய அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் உட்பட ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனக்.

இவர்கள் ஏற்றுமதியாளர்கள் கட்டிய வரியை அரசு திரும்ப கொடுப்பதில் ஏற்படும் தாமதம், அதிக அளவு வட்டியால் ஏற்படும் பாதிப்பு உட்பட பல்வேறு கஷ்டங்களை விளக்கினார்கள்.

இந்த நிதி ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் ஏற்றுமதி 30% அதிகரித்துள்ளது. ஆனால் அடுத்த ஆறு மாதங்களில் ஏற்றுமதி சரிந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 12% குறைந்தது. நவம்பர் மாதமும் ஏற்றுமதி குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் நவம்பர் வரை 119.3 பில்லியன் டாலர் மதிப்பிற்கே ஏற்றுமதி ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஏ.சக்திவேல் கருத்து தெரிவிக்கையில், மத்திய அரசிடம் இருந்து உடனடியாக உதவி கிடைக்காவிட்டால், இந்த நிதி ஆண்டில் 170 பில்லியன் டாலர் அளவிற்கு கூட ஏற்றுமதி செய்வது சிரமமே. ஏற்றுமதி துறையில் வேலை பார்க்கும் 1 கோடி பேர் மார்ச் மாத வாக்கில் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டும் என்று எச்சரித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil