Publish Date: Thu, 08 Jan 2009 (18:34 IST)
Updated Date: Thu, 08 Jan 2009 (18:31 IST)
அயல்நாடுகளில் வாழ்கின்ற இந்தியர்கள், இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று அயல்நாடுவாழ் இந்தியர் விவகார துறை அமைச்சர் வயலார் ரவி கேட்டுத் கொண்டார்.
சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஏழாவது அயல்நாடுவாழ் இந்தியர் மாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாட்டை ஒட்டி, இந்திய தொழில் மற்றும் சேவை நிறுவனங்களின் வண்ணமிகு கண்காட்சியை மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் வி நாராயணசாமி துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வயலார் ரவி பேசும் போது, உலகளாவிய அளவில் பொருளாதார மந்தநிலை காணப்பட்ட போதிலும், இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கின்றது. ஆகையால் அயல்நாடுகளில் வாழ்கின்ற இந்தியர்கள், இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் ஏதேனும் பிரச்சினைகள் எழுமானால், அவை தீர்க்கப்படும் என்று கூறினார்.
இதன் முதல்நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் வயலார் ரவி பேசும் போது, இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், அண்மையில் பிரதமர் அறிவித்த திட்டங்கள் பயனுள்ள வகையில் அமையும். நமது நாடு அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அத்துடன் உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய நாடாகவும் திகழ்கிறது.
அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் நமது நாட்டோடு தொடர்பு ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக விளங்கும் மொழி மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என்று வயலார் ரவி கூறினார்.
சென்னையில் ஏழாவது வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு நடப்பதையட்டி இந்திய தொழில் மற்றும் சேவை அமைப்புகளின் வண்ணமிகு கண்காட்சியை சென்னை வணிக மையத்தில் மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் திரு.வி நாராயணசாமி துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி. நாராயணசாமி பேசுகையில், அயல்நாடுவாழ் இந்தியர்கள் மற்றும் இந்தியவம்சாவளியினரின் நலன்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அயல்நாடுவாழ் இந்திய கணவர்கள், மனைவி மீது வன்முறையில் ஈடுபடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இங்கு நடைபெறவுள்ள மாநாட்டில் இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கவும், இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பதற்குரிய வழிமுறைகளை ஆராயவும் தனி ஒரு அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த கண்காட்சியில், 12 மாநிலங்கள், பல்வேறு வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல அமைப்புகளின் 75 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய, மாநில அரசுத்துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், சுகாதாரம், விருந்தோம்பல், தொலைத்தொடர்பு, கைவினைப்பொருள்கள், தகவல்தொடர்பு உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பொருட்களையும், தாங்கள் அளிக்கும் சேவைகள் பற்றிய விவரங்களையும் காட்சிக்கு வைத்திருந்தனர்.
முதலீடு செய்பவர்களை கவரும் வகையில் தங்கள் மாநிலம் அளிக்கக்கூடிய சலுகைகள் மற்றும் வசதிகள் குறித்த விவரங்கள் மாநில அரசுகளின் அரங்குகளில் காணப்பட்டது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இந்தியர்களுக்கு அளிக்கும் சேவைகள் குறித்த விவரங்களை வங்கிகள் தங்களது அரங்குகளில் காட்சிக்கு வைத்திருந்தன.
Webdunia
Publish Date: Thu, 08 Jan 2009 (18:34 IST)
Updated Date: Thu, 08 Jan 2009 (18:31 IST)