Publish Date: Tue, 06 Jan 2009 (17:44 IST)
Updated Date: Tue, 06 Jan 2009 (17:43 IST)
சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினருக்கான மாநாடு சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.
இம்மாநாட்டை வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி துவக்குகிறார். இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து 1500 க்கும் மேற்பட்ட அயர்நாட்டு வாழ் இந்திய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் சுரினம் நாட்டின் குடியரசு துணைத் தலைவர் ராம்தியன், மொரீசியஸ் நாட்டின் குடியரசு துணைத் தலைவர் அங்கிடி செட்டியார், மலேசியா, மொரீசியஸ், சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்க மற்றும் கனடா நாட்டு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
அத்துடன் பிஜீ நாட்டின் முன்னாள் பிரதமர் திரு மகேந்திர சௌத்திரி, மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு ஆகியோரும் இதில் கலந்து கொள்கின்றனர்.
இம்மாநாட்டில் உலக அரங்கில் எழுச்சிமிக்க இந்தியா, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வெளிநாடு வாழ் இந்தியர்களும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு, மொழி மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு போன்ற கருத்துக்களில் விரிவாக விவாதங்கள் நடைபெறும். அனைத்து அம்சங்களும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனை ஊக்குவிக்கும் நோக்கில் இடம் பெறும்.
இம்மாநாட்டின் மூலமாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இந்திய அரசுக்கு இடையேயான உறவு வலுப்படுவதுடன் பொருளாதார கலாச்சார உறவுகள் வலுப்படவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வரும் வியாழக்கிழமை அன்று முறைப்படி இம்மாநாட்டை துவக்கி வைக்கிறார். குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா தேவிசிங் பாட்டில் வெள்ளிக்கிழமை அன்று நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளார். அவர் சிறப்பாக பங்காற்றிய வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினருக்கான விருதுகளை வழங்கிறார்.
இம்மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, குஜராத் மாநில முதலமைச்சர்களும் பங்கேற்று கருத்து பரிமாற்றம் செய்யவிருக்கின்றனர். இந்திய வம்சாவழியை சேர்ந்த 20 பத்திரிகையாளர்கள் பங்கேற்கின்றனர். 13 நாடுகளில் இருந்து 34 வெளிநாடு வாழ் இந்திய இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.
Webdunia
Publish Date: Tue, 06 Jan 2009 (17:44 IST)
Updated Date: Tue, 06 Jan 2009 (17:43 IST)