மும்பை பங்குச் சந்தைக் குறியீடு (சென்செக்ஸ்) இன்று 20 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையின் குறியீடும் (நிஃப்டி) 6 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.
ஆனால் பங்குகளி்ன் விலை ஏற்ற இறக்கமாக இருந்ததால், இவை மீண்டும் குறைந்தன.
மும்பை பஙகுச் சந்தையின் சென்செக்ஸ் காலையில் வர்த்தகம் தொடங்கிய போதே 20 ஆயிரத்தை தாண்டி, சென்செக்ஸ் 20,018.17 என்ற அளவில் இருந்தது. ஒரு நிலையில் 20,064.31 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் மதியத்திற்கு பிறகு பெரிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்ததால் சென்செக்ஸ் குறைய ஆரம்பித்தது. மதியத்திற்கு பிறகு ஒரு நிலையில் 350 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 19,716.57 புள்ளிகளாக குறைந்தது. இறுதியில் நேற்றைய இறுதி நிலவரத்தை விட 57.80 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 19,795.87 ஆக முடிந்தது.
இதேபோல் தேசிய பங்குச் சந்தையில் (நிஃப்டி) காலையில் வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் 6,022 புள்ளிகளாக உயர்ந்தது. இறுதியில் நேற்றைய நிலவரத்தை விட 14.70 புள்ளிகள் உயர்ந்து 5,954.70 புள்ளிகளில் முடிந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 19.07 புள்ளிகள் குறைந்தது. ஆனால் சுமால் கேப் 88.77 புள்ளிகளும், பி.எஸ்.இ-500 13.18 புள்ளிகளும் உயர்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜூனியர், மிட்கேப் 50 பிரிவு பங்குகளின் குறியீட்டு எண் மட்டும் குறைந்தது. மற்ற பிரிவுகள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் நடந்ததில் 1,737 நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தன. 1,102 நிறுவன பங்கு விலை குறைந்தது. 43 நிறுவனங்களின் பங்கு விலையில் மாற்றமில்லை.
சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் விப்ரோ, ஏ.சி.சி, பஜாஜ் ஆட்டோ, பி.ஹெச்.இ.எல்., கிராசிம், ஹெச்.டி.எப்.சி. வங்கி, எல்.அண்ட்.டி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், சத்யம், டாடா ஸ்டீல், ஹின்டால்கோ ஆகியவற்றின் பங்குகள் விலை குறைந்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, டி.சி.எஸ்., ஹெச்.டி.எப்.சி., பார்தி ஏர்டெல், சிப்லா, ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஐ.டி.சி., மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரான்பாக்ஸி, எஸ்.பி.ஐ. ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தது.