Publish Date: Thu, 08 Jan 2009 (10:53 IST)
Updated Date: Thu, 08 Jan 2009 (10:52 IST)
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் திடீர் மழையால், 600க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 நவம்பரில் நிஷா புயலால் பெய்த தொடர் மழைக்கு நாகை மாவட்டத்தில் 2 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்தது. இது நேற்று மதியம் வரை நீடித்தது. சீர்காழி, கொள்ளிடம், கொண்டல் ஆகிய பகுதிகளில் புயல் மழைக்கு தப்பிய 50 ஏக்கர் வயல்களில் நேற்று முன்தினம் சம்பா அறுவடை பணி நடந்தது. திடீர் மழையால் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையில் நனைந்தன.
நெற்களம் ஈரமானதால் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை கட்டி எடுத்துச் செல்லும் பணி நடைபெறவில்லை. செம்பனார்கோவில், பொறையாறு பகுதிகளில் 400 ஏக்கரில் அறுவடை பணிகள் நடந்தன. அப்பகுதிகளிலும் திடீர் மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன.
மயிலாடுதுறை பகுதியில் நேற்று முன்தினம் அறுவடை செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்கதிர்கள் வயலிலேயே போடப்பட்டு இருந்ததால் மழையில் நனைந்தன.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று பெய்த திடீர் மழையால் 40 ஏக்கரில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. திடீர் மழையால் நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Webdunia
Publish Date: Thu, 08 Jan 2009 (10:53 IST)
Updated Date: Thu, 08 Jan 2009 (10:52 IST)