Publish Date: Tue, 19 Jun 2007 (12:53 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (18:56 IST)
நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 3 பாடங்கள் வரை தோல்வி அடைந்த மாணாக்கர்கள் வரும் ஜுலை மாதம் நடைபெற உள்ள சிறப்பு துணைத்தேர்வுகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடி அனுமதி திட்டத்தின் கீழ் 25-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி, சிறப்பு துணைப் பொதுத்தேர்வுகள் ஜுலை மாதம் நடைபெற உள்ளன. இந்த சிறப்பு தேர்வுகளுக்கு அறிவிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விணëணப்பிக்காத மாணவ-மாணவிகள் உடனடி அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் வருகிற 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வழங்கப்படும்.
3 பாடங்கள் வரை தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். மூன்று பாடத்திற்கு தேர்வு எழுத ரூ.625 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டணத்தை `அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை' என்ற பெயரில் டிமாண்ட் டிராப்டாக செலுத்த வேண்டும்.
சென்னை, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்கள் கிடைக்கும். மேலும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.) அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பம் மற்றும் ஹால் டிக்கெட்டில் ஓட்டப்படும் புகைப்படத்தில் மாணவர்கள் தாங்கள் முன்பு படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மட்டுமே சான்றொப்பம் பெற வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 29-ந் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மற்றும் கூரியர் மூலமோ விண்ணப்பங்களை அனுப்பக்கூடாது.
நேரில் பெற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு உடனடியாக நேரில் ஹால்டிக்கெட் வழங்கப்படும். இந்த சிறப்பு திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மட்டுமே இதற்கென தனியாக தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.