ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி முதல்வருக்கு பொறியியல் புதுமைமிகு ஆய்வுகளுக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருபவர் டாக்டர் ஏ.சண்முகம். இவர் கடந்த சில ஆண்டிற்கு முன் இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிக்கான முதல்வர் விருதை பெற்றார். இதன் தொடர்ச்சியாக தற்போது பொறியியல் புதுமைமிகு ஆய்வுகளுக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.
"அகல அலைவரிசை கணினி வலையமைவுகள் மற்றும் தந்தியில்லா வலையமைவுகள்' என்ற பாடப்பிரிவில் புதுமையான ஆய்வுகளை மேற்கொண்டதற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
'பேராசிரியர் கே.ஆறுமுகம் தேசிய விருது' என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருதை இந்திய தொழில்நுட்ப கல்வி சங்கம் வழங்குகிறது.
ஒரிசா மாநில தலைநகர் புவனேஷ்வரில் நடந்த விழாவில் இந்த விருது டாக்டர் ஏ.சண்முகத்துக்கு வழங்கப்பட்டது.