மனித வாழ்க்கைக்கு அன்றாடத் தேவை உணவு மற்றும் சுத்தமான குடிநீர் என்பதை அனைவரும் அறிவோம்.
இரவில் சுமார் 8 மணி நேர தூக்கத்திற்குப் பிறகு, பெரிய இடைவெளி விட்டு காலையில் உணவு சாப்பிடுவதாலேயே அதனை பிரேக் ஃபாஸ்ட் என்று கூறுகிறோம்.
காலையில் லேசான இட்லி, இடியாப்பம், தோசை போன்ற உணவுகளை சாப்பிடுவதே பெரும்பாலும் தமிழ்நாட்டில் வழக்கமாக உள்ளது. மதிய உணவாக சற்றே அதிக அளவு உணவைச் சாப்பிடுகிறோம். சிலர் அசைவ உணவுகளையும், மீன் உணவுகளையும் சாப்பிடக்கூடும்.
வேறு சிலரோ, இரவு நேரத்தில் அசைவ உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.
அசைவ உணவானது பொதுவாக ஜீரணிப்பதற்கு தாமதமாகும். தவிர அதிக அளவு எரியும் சக்தி அசைவ உணவுகளுக்குத் தேவைப்படலாம்.
எனவே பெரும்பாலும், இரவு நேரங்களில் சிக்கன், இறைச்சி, மீன் ஆகியவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
இரவு நேரத்தில் முழு திருப்தியாக நிறைவாக சாப்பிட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
அரிசி உணவோ அல்லது இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளோ கூடிய வரை நீராவியில் வேக வைத்த உணவுகளை இரவில் எடுத்துக் கொள்வதால் அஜீரண பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
அதிலும் வெகுநேரமாகி பின்னிரவில் சாப்பிடுபவராக இருப்பின் அசைவ உணவு வேண்டவே வேண்டாம்.
செரிமானம் ஆகாமல் போகும்பட்சத்தில், வாந்தி, வயிற்று வலி போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். அஜீரணக் கோளாறில் இருந்து விடுபட அசைவ உணவுக்குப் பின் வாழைப்பழங்கள் சாப்பிடலாம்.
எந்த வயதினராக இருந்தாலும், இரவில் அசைவ உணவு வகைகளைத் தவிர்ப்பதுடன் மிகவும் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு வகைகளை எடுத்துக் கொள்வதே சிறந்தது.