வசதி படைத்தவர்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆந்திராவின் விஜயவாடா நகரில் மாநில அரசு மற்றும் யுனிசெப் உதவியுடன் குழந்தைகள் சத்துணவு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு “ஆந்திராவில் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து கொண்டே வருவது கவலை தருகிறது. இதற்கு முக்கிய காரணம் பணக்காரர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் குழந்தையே வேண்டாம் என நினைக்கிறார்கள் அல்லது ஒரு குழந்தையோடு நிறுத்தி விடுகிறார்கள். ஆனால், ஏழைகள் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள்.
ஆந்திர அரசு குடும்பக் கட்டுபாடு பிரச்சாரத்தை கடைபிடித்து வந்தது. தற்போது அதை கைவிடுவது என முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மக்கள் தொகையை அதிகரிக்க முடியும்.
ஜப்பான், சீனா நாடுகளில்தான் வயதானவர்கள் அதிகம். தற்போது இந்தியாவிலும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகள்தான் எதிர்கால இந்தியாவை நிர்ணயிப்பவர்கள். இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பணக்காரர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களால்தான் குழந்தைகளுக்கு நல்ல சத்தான உணவை கொடுக்க முடியும்” என்று கூறினார்.