புதுடெல்லி : பெண்களை ஆண் காவலர்கள் சோதனை செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
போதை மருந்து கடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட பெண்களை ஆண் காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டது சட்டவிரோதம் என்றும், இதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட பெண்கள் விடுதலை செய்யப்படுகின்றனர் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தரசஸ் மாவட்டம் தத்தா கிராமத்தைச் சேர்ந்த குர்ணாம் கவுர், ரஞ்சித் கவுர் மற்றும் குர்ஜித் கவுர் ஆகிய 3 பெண்கள், ஹெராயின் கடத்தியதாக கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த கூடுதல் நீதிமன்றம் இவர்களுக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 3 பேரும், சண்டிகர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பல்தேவ் சிங், 3 பெண்களையும் சோதனை செய்து போதை மருந்தை பறிமுதல் செய்ததாக கூறப்பட்டிருந்தது.
போதை மருந்து தடுப்பு சட்டத்தின் படி சந்தேகப்படும்படியான பெண்களை ஆண் அதிகாரிகள் சோதனை செய்வது சட்டவிரோதம் ஆகும். இந்த சட்டநுணுக்கத்தை ஆதாரமாக வைத்து 3 பெண்களையும் உயர் நீதிமன்றம் விடுவித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.எஸ்.சின்கா, முகுந்தன் சர்மா மற்றும் எச்.எல்.தத்து ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, சண்டிகர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.
பெண்களை ஆண் காவலர்கள் சோதனை செய்தது சட்டவிரோதமானது. அரசு தரப்பு வழக்கு செல்லாது. இதை தள்ளுபடி செய்கிறோம் என தீர்ப்பளித்தனர்.