Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மஞ்சள், மிளகுப் பாலின் மகத்துவம்!

மஞ்சள், மிளகுப் பாலின் மகத்துவம்!
, திங்கள், 21 ஜூலை 2008 (13:27 IST)
`இயற்கையை மீறி எதுவும் நடக்காது'; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்' - இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.

பழம்பெருசுகள் இதுபோல பேசுகிறார்களே என்று சாதாரணமாக அவர்களை எடைபோட்டு விட முடியாது. சவடால் பேச்சுக்கு ஏற்ப அவர்களிடம் விஷயமும் இருக்கும்.

இப்படித்தான் ஒரு நண்பர் வேலநிமித்தமாக நிறைய ஊர்களுக்குச் சென்று விட்டு, கடைசியாக திருநெல்வேலி பக்கமுள்ள கடையத்திற்குச் சென்றுள்ளார்.

பல்வேறு ஊர்களில் சுற்றித் திரிந்த களைப்பு, ஆங்காங்கே குடித்த தண்ணீர் என இருமல், சளி என்று மாட்டிக்கொண்டார்.

கடையத்தில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் உள்ள வீட்டு திண்ணையில் இருந்த பெரியவர் ஒருவர், நண்பரின் இருமல் சத்தம் கேட்டு அவரை அழைத்தார்.

``என்ன தம்பி, இப்படி இருமுறீக... என்ன உங்களுக்கு உடம்புக்கு...?''

``ஒண்ணுமில்ல, தாத்தா. அங்கங்க சுத்துனது ஒத்துக்கல. அதான் இருமல் அதிகமாயிடுச்சி''

``அவ்வளவுதானே, பக்கத்துல இருக்கற பால் கடையில போய், மஞ்சள், மிளகுத்தூள் போட்டு ஒரு பால குடிச்சிட்டு வாங்க. எல்லாம் சரியாப் போயிடும்'' - என்றார் பெரியவர்.

அதேபோல் நண்பரும், மிளகுப் பொடி, மஞ்சள் தூள் கலந்து ஒரு 200 மி.லி. அளவு பாலை குடித்து விட்டு அன்று நிம்மதியாகத் தூங்கியுள்ளார். அடுத்த நாளே நல்ல பலன் தெரிந்ததாகக் கூறி, புளகாங்கிதம் அடைந்தார் அவர்.

சரி, விஷயத்துக்கு வருவோம். நாள்பட்ட சளி, இருமலுக்கு அருமருந்து மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் என்றால் மிகையாகாது.

விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.

மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.

Share this Story:

Follow Webdunia tamil