Publish Date: Sat, 12 Aug 2017 (15:23 IST)
Updated Date: Sat, 12 Aug 2017 (15:29 IST)
இந்தியா 70-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட சரோஜினி நாயுடு அவர்களை நினைவு கூர்வதில் பெருமை அடைகிறோம். சரோஜினி நாயுடு இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அழைக்கப்படுகிறார்.
சரோஜினி நாயுடு ஒரு பிரபலமான அறிஞர், கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.
1905 ஆம் ஆண்டில் வங்காளம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். 1903-17 காலகட்டத்தில் சரோஜினி அவர்கள் கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநாத் தாகூர், முகம்மது அலி ஜின்னா, அன்னி பெசண்ட், சி.பி.ராமஸ்வாமி ஐய்யர், மோகன்தாஸ் காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் அறிமுகத்தைப் பெற்றார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார். காந்தி, அப்பாஸ் தியாப்ஜி மற்றும் கஸ்தூரி பாய் காந்தி ஆகியோர் கைதுக்குப் பின் தர்சண சத்தியாகிரகத்தில் துடிப்புடன் பங்கேற்றார்.
1915 முதல் 1918 ஆண்டுகளுக்கிடையில் அவர் இந்தியா முழுவதும் இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்வு, பணியாளர் நலன், பெண் கொடுமை மற்றும் தேசியப் பற்று குறித்து பல்வேறு சொற்பொழிவுகளை மேற்கொண்டார். ஜவகர்லால் நேருவை 1916 ஆம் ஆண்டு சந்தித்ததற்குப் பின் அவர் சம்பரன் இன்டிகோ பணியாளர்கள் பிரச்சினையைக் கையில் எடுத்தார். 1925 ஆம் ஆண்டில் அவர் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே ஆவார்.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுநராக பதவியேற்றார்.