Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்படைவீடு - திருப்பரங்குன்றம்

Advertiesment
முதல்படைவீடு

Webdunia

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம்.

அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர் என்று அறியப்படுகிறது.

சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம். இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

அமைவிடம் :

தமிழ்நாட்டில் சிறப்புற்று விளங்குவது மதுரை மாநகர். இம்மாமதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே 9 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது திருப்பரங்குன்றம் என்னும் திவ்வியத் தலமாகும். ரயில் வழியாகவும் இவ்வூரை அடையலாம். மதுரையிலிருந்து இத்திருத்தலத்திற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிறுத்தம் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.

திருப்பரங்குன்றம் பெயர்க்காரணம் :

திரு + பரம் + குன்றம். பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகத் திருப்பரங்குன்றம் என ஆயிற்று.

லிங்க வடிவில் மலை :

திருப்பரங்குன்றம் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருட் செறிந்த மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார்.

இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

தவம் செய்த முருகப்பெருமான் :

குரு பக்தியின்றி ஞானம் பெற முடியாது. கயிலாயத்தில் பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடிமீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்கு தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.

புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

எனவே முருகப்பெருமானே பிரணவ மந்திரத்தினை, அதன் உட்பொருளை பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாஸ்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

காட்சி கொடுத்த சிவன்-பார்வதி :

கடைசியில், சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து அருளினார்கள். அவர்கள் இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள்.

அவர்களுடைய ஆலயம் இன்றும் திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் வழங்கி வருகிறது. எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன்-பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம்.

முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அவதரித்ததன் நோக்கம் :

முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.

தெய்வயானை திருமணம் :

தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். முருகன் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

சரவணப் பொய்கை :

மலையடிவாரத்தில் கீழ்த்திசையில் சரவணப்பொய்கை அமைந்துள்ளது. இத்தீர்த்தம் முருகனின் கைவேலினால் உண்டானதென்றும் இத்தீர்த்தத்தைக் கண்டாலும், நீராடினாலும் பாவங்கள் நீங்கப்பெற்று, விரும்பிய வரத்தைப் பெறுவர் என்றும் கூறப்படுகிறது.

சேவற்கொடி :

திருப்பரங்குன்றத்து முருகன் கோயிலில் எப்போதும் சேவல் கொடி வீசிப் பறந்து கொண்டே இருக்கும். கொடி பட்டொளி வீசி உயரத்தில் பறப்பது கோயில் நோக்கி வருவோர்களை "வருக வருக" என வரவேற்பது போன்று காணப்படும்.

குடும்ப சமேதராய் விளங்கும் திருக்கோலம் :

மற்றத் திருக்கோயிலின் கருவறை போல் அல்லாமல் இத்திருக்கோயில் கருவறை பெரியதாக ஐந்து தெய்வத் திருவுருவங்களின் இருப்பிடமாய் உள்ளது. மூலவர் முருகப்பெருமானுக்கு எனத் தனிக் கருவறை அமையாமல் பாறையில், இடது புறம் முருகப் பெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தர அடுத்து, பக்கத்தில் பிற தெய்வ உருவங்கள் உள்ளன.

முருகப்பெருமானை அடுத்துக் கோயில் கொண்டு பாறையின் மையத்தில் அன்னை மகிசாசுரமர்த்தினியின் திருஉருவம் காணப்படுகிறது. அன்னையை அடுத்து, மற்றொரு புதல்வர் கற்பக விநாயகரின் திருவுருவைக் காணலாம்.

கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மலையைக் குடைந்து சத்திய கிரீசுவரர் எனும் திருப்பெயர் கொண்டவராய் சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் விளங்குகிறார். பரங்கிரிநாதேசுவரர் அவர்.

கருவறையின் வலது புறத்தே மேற்குத் திசையை நோக்கியவாறு மலையைக் குடைந்து பவளக் கனிவாய் பெருமாளும் செதுக்கப்பட்டுள்ளனர். சைவ, வைணவ வேறுபாடு இல்லாமல் கருவறையில் முருகப் பெருமானின் அன்னை, அண்ணல், அண்ணன், மால் என குடும்ப சமேதராய் விளங்கும் இத்திருக்கோலம் எங்கும் காணக்கிடைக்காத திருக்கோலம்.

முருகப்பெருமான் திருமணக்கோலத்தில் மணமகனாய்த் தெய்வயானையுடன் திருத்தோற்றம் கொண்டு விளங்குகிறார். இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு அமர்ந்திருக்கிறார். அப்பெருமானின் வாகனங்களான யானை, ஆடு ஆகியவற்றின் வடிவங்களும், காவல் தேவதைகளின் வடிவங்களும் பாறையில் உள்ளன. இப்பெருமானின் திருமணக்கோலம் காண அனைத்து தெய்வங்களும் வந்து சூழ்ந்துள்ளவாறு கருவறை அமைந்துள்ளது.

இடது புறம் தெய்வயானை, வலது புறம் நாரதர் காணப்படுகின்றனர். மூலவரைக் குடையினை குடைந்து உருவாக்கியுள்ளதால் மூலவருக்கு இத்திருக் கோயிலில் திருமுழுக்கு கிடையாது. எண்ணெய், புனுகு சாத்துதல் மட்டுமே உண்டு. மணக்கோலத்தில் மங்கையுடன் இருப்பவராதலால் பால், பன்னீர் அபிஷேகம் என எதுவும் மூலவருக்கு நடைபெறுவதில்லை. இங்கு வேலவனின் வேலுக்கு மட்டுமே எல்லாம் என்பது குறிப்பாகச் சுட்டிக்காட்டத்தக்கது.

கருவறையில் கந்தப் பெருமான் காலடியில் காணப்படும் யானை, இந்திரனுடைய ஐராவதம் எனவும், இந்திரனின் புதல்வியானதால் தெய்வயானையைப் பிரிய மனமில்லாது, முருகனுக்குத் தொண்டாற்ற அது வந்தது எனவும் கூறுவர்.

முருகப் பெருமானை அடுத்துள்ள திருஉரு அன்னை மகிசாசுரமர்த்தினி. முருகனுக்கு வலப்புறம் பவளக்கனிவாய்ப் பெருமாள், திருமகள், மதங்க முனிவருடன் இருக்கிறார். அவருடைய கருவறை வெளிப்புறச்சுவர்களில், ஆதிசேடன் மீது பாற்கடலில் இருக்கும் பெருமாள், வராகமூர்த்தி முதலிய உருவங்கள் அமைந்துள்ளன.

கருவறையில் முருகப் பெருமானை வழிபட்டு இடது புறம் உள்ள வாயில் வழியாகக் கீழே இறங்கினால் கீழ்ப்பகுதியில் குகைக்கோயில் ஒன்று அமைந்துள்ளது. அங்கே அன்னபூரணி, உலக உயிர்களை உணவு அளித்துக் காக்கும் தெய்வம் தன் சுற்றுச் சார்பாளர்களுடன் தோற்றம் தருகிறாள்.

திருத்தலச் சிறப்புகள் :

முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலமாதலால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்ளல் சிறப்பு என்று கருதப்படுகிறது. எனவே மணிவிழா நிகழ்த்த உரிய திருத்தலம். நெற்றிக் கண்ணைத் திறந்ததால், சிவனின் பார்வைபட்டு சரும நோய்க்கு ஆளான நக்கீரர் இத்தலத்துப் பெருமானை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார்.

இக்கோயில் மற்றையக் கோயில்களைப் போலத் திருச்சுற்று எனப்படும் பிரகாரம் என்பதே இல்லாத கோயில். மேலே, மேலே ஏறிச் சென்று கொண்டிருக்க வேண்டியதுதான். கருவறை வலம், மூலவர் வலம், உற்சவர் வலம் வருதல் என்பது இத்திருக்கோயிலில் இயலாது. ஒரு நேர்க்கோட்டில் முருகா, முருகா என்றவாறு செல்வது போலச் செல்லும்படியாக அமையப் பெற்றிருக்கிறது.

அன்னதானம் :

இத்தலத்தில் அன்னதானம் செய்தால் செல்வம் பெருகி வாழ்வில் வளம் சேரும் என்பது அன்பர்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை நினைந்து இல்லத்தில் தூய்மையாகத் தயிர் அன்னம் செய்து இங்கே கொண்டு வந்து ஏழை மக்களுக்கு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

விழாக்கள் :

தைப்பூசம், கார்த்திகைத் திருநாள், தெய்வயானையை மணந்து கொண்ட பங்குனி உத்திர நாள் மிகவும் சிறப்புடைய விழா நாட்கள். இத்தலத்து முருகப் பெருமான் சித்திரை மாதத்தில் மதுரையில் நடைபெறும் அன்னை மீனாட்சி திருக்கல்யாண விழாக்கோலம் காண மதுரை சென்று திரும்புகிறார். திருப்பரங்குன்றத்தில் உள்ள மற்றொரு குன்றான கூடுதட்டிப் பரம்பு எனும் குன்றின் மீது ஆண்டில் ஒருமுறை உற்சவமூர்த்தி சென்று விழாக்கோலம் காணுதலும் உண்டு.

எனவே, முருகப்பெருமான்-தெய்வயானை திருமணம் நடைபெற்ற தலமாதலால், திருமணம் செய்வோர், மணிவிழா செய்வோர் மட்டுமின்றி எல்லோரும் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய முக்கிய தலம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலாகும்.

Share this Story:

Follow Webdunia tamil