மாம்பழ விற்பனை துவங்கி படு ஜோராக நடந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் மஞ்ஞை மஞ்சேலென காட்சி அளிக்கிறது மாம்பழங்கள். தெருவோரக் கடைகளிலும் சரி, நடைபாதைக் கடைகளிலும் சரி தற்போது அதிகம் வியாபாரமாவது மாம்பழம்தான்.
குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி குறிப்பாக பெண்கள் மாம்பழத்தை வாங்கி அதிகளவில் சாப்பிடும் நேரம் இது. பலரது வீடுகளில் சாப்பாட்டுக்கு பதார்த்தமாகவே இந்த மாம்பழத்தை வைத்துக் கொள்வார்கள். பள்ளி திறக்கட்டும், பாதி மாணவர்களது உணவு டப்பாக்களில் மாம்பழம் நிச்சயம் இடம்பெற்று விடும்.
மாம்பழத்தை வெறுப்பவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அதிகமாக சாப்பிட விரும்பாதவர்கள் என்று வேண்டுமானால் இருப்பார்கள். அவர்களும், இதுவரை சுவையான மாம்பழத்தை சுவைத்ததில்லை என்றுதான் கூற வேண்டும். சுவையான மாம்பழத்தை சுவைத்தவர்கள் யாரேனும் மாம்பழம் வேண்டாம் என்று கூறுவார்களா? அப்படியே அவர்கள் கூறினால் அவர்களுக்கு ஒன்று நீரிழிவு நோய் அல்லது மஞ்சள் காமாலை இருக்க வேண்டும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். சரி இந்த கதையெல்லாம் எதற்கு
இந்த மாம்பழத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் உடனே என்ன சொல்வீர்கள்.
ஆம், அதற்குத்தான் இந்த கட்டுரை. அதாவது மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துகளும் காணப்படுகின்றன.
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த வைட்டமின்கள் மற்றும் சத்துகள் நமக்கு எளிதில் கிடைத்துவிடும்.
மாம்பழத்தை சாப்பிடுபவர்கள், அதன் தோல் பகுதியை பெரும்பாலும் நீக்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். இது பெரும் தவறு. ஏன் என்றால் மாம்பழத்தின் தோல் பகுதியில்தான் அதிக அளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சியம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் காணப்படுகின்றன.
பொதுவாக மாம்பழ வரத்து ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் மாத இறுதி வரை நீடிக்கும். உலகில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாம்பழ ரகங்கள் இருந்தாலும் இந்தியாவில் குறிப்பிட்ட சில ரக மாம்பழங்கள் மட்டுமே விளைகிறது. இவற்றில் இமாம்பசந்த், அல்போன்சா, பங்கனப்பள்ளி, பீத்தர், செந்தூரா, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல்கோவா, கிளிமூக்கு உள்ளிட்ட சில ரகங்கள் முக்கியமானவை.
பொதுவாக நமக்கு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து மாம்பழ வரத்து அதிகமாக இருக்கும். ஆனால் கடந்தாண்டை விட இந்தாண்டு மாம்பழ விலை சற்று அதிகமாக இருப்பதால், மாம்பழப் பிரியர்கள் பலரும், மாம்பழம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இன்னும் சில நாட்கள் போகட்டுமே, விலை குறையும் என்று காத்திருக்கின்றனர். ஒரு சிலர்.. என்ன விலை என்று கூட கேட்காமல் வாங்கிச் சென்று சுவைக்கின்றனர்.
மாம்பழத்திலும் தற்போது நமக்கு கவலையை அளிக்கும் விஷயம் ஒன்று வந்துவிட்டது.
அதுதான், மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கற்களைப் பயன்படுத்துவது. வியாபாரிகள் பலரும், மாங்காய்களை வாங்கி வந்து குடோனில் போட்டு, அதனுடன் கார்பைடு கற்களையும் வைத்து விடுகின்றனர். இதனால் மாம்பழங்கள் சீக்கிரம் பழுத்துவிடுகின்றன. ஆனால், இப்படி பழுக்க வைக்கும் மாம்பழங்களை சாப்பிடுபவர்களுக்கு, உடல் சூடு அதிகரிக்கும், கொப்புளம், குடல் புண் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
காவல்துறையும், பல இடங்களில் சோதனை நடத்தி இப்படி பழுக்க வைக்கும் மாம்பழங்களை அழித்து வருகின்றனர்.
எனினும் இலைமறைக் காயாக ஆங்காங்கே கார்பைடு கற்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சந்தைக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன.
மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு, அதனை குளிர்ந்த நீரில் அல்லது சாதாரண நீரில் மூழ்குமாறு போட்டு வைத்துவிட்டு பின்னர் சாப்பிடுவது உடலுக்கு சூட்டை ஏற்படுத்துவதை குறைக்கும் என்று சிலர் கூறுகிறார்கள்.
மேலும், மாம்பழம் கிடைக்கிறதே என்று அதிகமாக சாப்பிட்டு விடாமல், அளவாக சாப்பிடுவதும் உடலுக்கு மிகவும் நல்லது. அப்படி மாம்பழம் சாப்பிட்டால், பால் குடிப்பது உடல் சூட்டைக் கட்டுப்படுத்தும்.
கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. அதிக சூடு குழந்தைக்கு நல்லதல்ல. அதில்லாமல் மாம்பழத்தினால் குழந்தைக்கு மாந்தம் எனப்படும் நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால் கவனம் தேவை.
விளையும் அனைத்து மாம்பழங்களும் சாப்பிடுவதற்கு மட்டுமல்லாமல், அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில், மாம்பழத்தை வைத்து பச்சடி மற்றும் சட்னி செய்வார்கள். மாம்பழ ஊறுகாய், மாம்பழ ஜாம் உள்ளிட்டவையும் தயாரிக்கப்படுகிறது.
என்ன ஒரே மாம்பழ வாடை வீசூகிறதா? சரி சரி நாக்கில் எச்சில் ஊறுகிறது. போய் ஒரு மாம்பழம் வாங்கி சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம்.
வருகிறோம்.