முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது, கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது.
இந்த பித்தப் பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும்.நாம் உணவு உண்டதும், இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் குடலுக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.அவ்வாறு பித்தப் பை சுருங்கி விரிவடையாமல் நின்று போவதால், பித்தப் பையில் சுரங்கும் ஜீரண நீர் தேங்கி கற்களாக மாறுகிறது. இந்த பித்தப் பையில் ஏற்படும் கற்களுக்கும், நாம் உணவில் தெரியாமல் சாப்பிட்டுவிடும் கற்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.பித்தக் கற்கள் மூன்று வகைப்படும். ஒவ்வொரு வகை கற்களும் ஒவ்வொரு காரணத்தினால் உண்டாகின்றன. பொதுவாக, உடல் பருமனாக இருப்பது, உணவில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பது, கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பது போன்றவற்றாலும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் விரைவாக உடைவதாலோ, பித்த நீர்ப் பையில் பாக்டீரியா அல்லது குடல் புழுக்கள் சேர்வதாலோ பித்தப் பையில் கற்கள் உண்டாகின்றன.பித்தப் பையில் கற்கள் உண்டான ஒருவருக்கு, வாயுத் தொல்லை ஏற்படுவது, சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பாகத்தில் வலதுபுறம் வலி உண்டாவது, மஞ்சள் காமாலை நோய் தாக்குவது, கடுமையான வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம்.நிறையப் பேர் பித்தப் பை கல் பிரச்சினை ஏற்பட்டு, சாதாரண வயிற்று வலி என்று நினைத்து மருந்து உட்கொண்டு வருவதால் எந்த பலனும் அளிக்காமல் இறுதியாகத்தான் மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்கள்.பித்தப் பை கற்களை அல்ட்ரா சவுண்ட் சோதனை மூலம் எளிதாகக் கண்டறிய முடியும். அப்படி கண்டறிய முடியாதவர்களுக்கு மட்டுமே சிடி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவைப்படுகிறது.பித்தப் பை கற்களுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சைதான் தீர்வாக உள்ளது. மருந்தினால் குணப்படுத்த முடியும் என்றாலும், 100ல் 10பேருக்கே மருந்து குணமளிக்கிறது.அதிலும் மருந்தை தொடர்ந்து சாப்பிட வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாவார்கள். மருந்தை நிறுத்தினால் மீண்டும் பிரச்சினை துவங்கிவிடும். மேலும் மாத்திரைகளினால் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே பித்தப் பை கற்களுக்கு அறுவை சிகிச்சையே பூரண குணமளிக்கும்.அறுவை சிகிச்சை என்றால் வயிற்றுக் கிழித்து செய்யப்படும் சிகிச்சை அல்ல. தற்போது லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நல்ல பலனை அளித்து வருகிறது. வயிற்றைக் கிழிக்காமல், ஒரு சொட்டு ரத்தத்தையும் வீணாக்காமல் இந்த சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது.
ஒரு சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இந்த சிகிச்சையைப் பெற்று வீடு திரும்பலாம்.
இந்த லேப்ரோஸ்கோப்பியிலும் தற்போது மினி லேப்ரோஸ்கோப்பி, மைக்ரோ லேப்ரோஸ்கோப்பி மற்றும் 3 சிசிடி காமிரா உதவியுடன் மேற்கொள்ளப்படும் சிகிச்சை என மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு விட்டது.
சிறுநீரகத்தில் கல் இருந்தால் கல் மட்டுமே அகற்றப்படும். ஆனால் பித்தப் பையில் கல் இருந்தால் பித்தப் பையே அகற்றப்படும்.
பித்தப் பையில் ஏற்படும் கற்களுக்கு பித்தப் பை சுருங்கி விரியாததுதான் முழுக் காரணமாக இருப்பதால்தான், இந்த சிகிச்சை முறையில், பித்தப் பையே அகற்றப்படுகிறது.
கற்கள் உண்டான பித்தப் பையை அகற்றுவதால் ஜீரணத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. எப்படியும் செயல்படாத பித்தப் பை இருந்தென்ன பயன். அதனால் பிரச்சினைகள்தான் ஏராளம். எனவே பித்தப் பையை அகற்றுவதால் என்ன நேரிடுமோ என்று நோயாளிகள் பயப்பட தேவை இல்லை.
பித்தப் பையில் கற்கள் இருக்கின்றன என்று தெரிந்த பின்பு முழுமையான உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம். உணவில் எண்ணெய், கொழுப்பு பொருட்கள் சேர்வதை கட்டுப்படுத்தி வர வேண்டும்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சிகிச்சை செய்து பித்தப் பையை அகற்ற வேண்டும். பித்தப் பையை அகற்றியதும் எப்போதும் உண்ணும் சாதாரண உணவை உண்ணலாம். எந்த உணவுக் கட்டுப்பாடும் இல்லை.
பித்தப் பை கற்களை கவனிக்காமல் விட்டுவிட்டால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதாவது, பித்தப் பை கல், பித்த நாளத்தில் விழுந்து அடைத்துக் கொள்வதால் மஞ்சள் காமாலை உண்டாகிறது.
சிலருக்கு இதனால் கணைய அழற்சி ஏற்பட்டு சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கும்.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக உரிய மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெறுவதே சிறந்தது.