அரசு நிறுவனங்களின் பருத்தி விதையால் பாதிப்பு இல்லை என்று ராசி விதை நிறுனம் தெரிவித்துள்ளது.
மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதை, அதிக வீரியம் கொண்ட பருத்தி விதையை மத்திய அரசின் ஆராய்ச்சி அமைப்பான சி.ஐ.சி. ஆர் உருவாக்கியுள்ளது.
இது தற்போது விவசாயிகள் மத்தியில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது மரபணு மாற்றப்பட்ட பிடி பருத்தி விதை விற்பனை செய்வதில் தனியார் நிறுவனங்களே உள்ளன. இந்த ரக விதை சென்ற வருடம் 78,487 டன் விற்பனையாகி உள்ளது. இது முந்தைய வருட விற்பனையுடன் ஒப்பிடுகையில் 27 விழுக்காடு அதிகம்.
இந்நிலையில் அரசின் மரபணு மாற்றப்பட்ட விதையால், தனியார் நிறுவனங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று விதை விற்பனை நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராசி விதை நிறுவனம் கூறியுள்ளது.
இதன் மேலாண்மை இயக்குநர் எம்.ராமசுவாமி கூறுகையில், அரசு அறிமுகப்படுத்தி உள்ள பிடி பருத்தி விதை, வீரிய விதை, எங்களுக்கு போட்டியாக இருக்கும் என்று நினைக்கவில்லை. எங்கள் விதை பயன்படுத்தினால் அதிக இலாபம் கிடைக்கும் என்று விவசாயிகளுக்கு நன்கு தெரியும்.
மொத்த விவசாய சாகுபடி செலவில் விதைக்கான செலவு 4 விழுக்காடாக உள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள விதை மலிவாக இருப்பதால், அவற்றை வாங்கலாமா என்று விவசாயிகள் முடிவு எடுப்பதை பொறுத்து வரவேற்பு இருக்கும் என்று தெரிவித்தார்.