ரேஸ் ட்ராக்கிற்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் அஜீத்குமார். இருங்காட்டுக் கோட்டையில் நடந்த எம்.ஆர்.எஃப். 1600 கார் ரேஸில் அஜீத்தான் ஸ்டார் ஆஃப் தி ரேஸ்.
அஜீத்தின் இந்த திடீர் முடிவு பலவித சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. மீண்டும் அஜீத் ரேஸில் தீவிரமாக ஈடுபடுவாரா என்பது அதில் ஒன்று.
கார் ரேஸில் அஜீத் தீவிரமாக இருந்தபோதுதான் அவரது படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன. மேலும், ரேஸில் அடிபட்டால் அஜீத்தை வைத்து படங்கள் தயாரிப்பவர்கள் கதி என்னாகும் என்றும் கேள்விகள் கிளம்பின. இந்த கேள்விகள் எழுப்பியவர்களை அஜீத் கடுமையான மொழியில் கண்டித்தார்.
ஆனால் அவரது ரேஸ் மோகம் அதிக நாள் நீடிக்கவில்லை. தொடர் தோல்விகள், நெருக்கடிகள் காரணமாக ரேஸில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்தார். அதேபோல் பல வருடங்கள் ரேஸில் கலந்து கொள்ளவுமில்லை.
இந்நிலையில் இருங்காட்டுக் கோட்டையில் நடந்த ரேஸில் கலந்து கொண்டிருக்கிறார். இப்போது எழும் கேள்வி, மீண்டும் ரேஸில் முழு வீச்சில் கலந்து கொள்வாரா?
ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் பயப்பட வேண்டாம். அந்த மாதிரி எந்த எண்ணமும் அஜீத்துக்கு இல்லை. சென்னையில் நடந்ததால் இந்தப் போட்டியில் கலந்து கொண்டாராம். மற்றபடி சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளும் வயது, உடல் எடை எதுவும் தற்போது அஜீத்திடம் இல்லை. சினிமாதான் அவரது ஒரே இலக்கு என்று நம்பிக்கை தருகிறார்கள் அஜீத்துக்கு நெருக்கமானவர்கள்.