ரஜினி படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாராகும் படம் எந்திரன். இயக்கம் ஷங்கர், ஜோடி உலக அழகி ஐஸ்வர்யா ராய் என எல்லாமே ஏ கிளாஸ். பாபாவுக்கு பாபா பக்கம் என்று தனி பத்தி ஒதுக்கிய பத்திரிகைகள்கூட எந்திரன் பற்றி எழுத தயங்குகின்றன. ஏனிந்த பாராமுகம்?
படத்தின் தயாரிப்பு கை மாறியதால்தான் இந்த சுணக்கம் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். படத்தைப் பற்றி நாம் ஏதாவது எழுதப்போய் அது அவர்களுக்கு உறுத்தலாக இருந்துவிட்டால் வீணாக கரண்டை கக்கத்தில் விட்டது போலாகிவிடுமே என அனைவருக்கும் சின்ன உதறல்.
தவிர சமீபத்தில் நடந்த அனைத்து சுப காரியங்களிலும் முதலாளாக கலந்து கொண்டார் ரஜினி. படம் நடிக்கும்போது இப்படி பப்ளிக் தரிசனம் தருகிறவர் அல்லவே சூப்பர் ஸ்டார் என இன்டஸ்டரியிலும் புருவம் உயர்த்துகிறார்கள்.
நாம் விசாரித்ததில் பிஸியாகவே இருக்கிறார் ரஜினி. கடந்த வாரத்தில் மாயாஜாலில் எந்திரன் படத்தின் சில காட்சிகளை ஷங்கர் படமாக்கியிருக்கிறார். இதற்காக பிரமாண்ட அரங்குகள் போடப்பட்டிருந்தன. இங்கு நடந்த ஷூட்டிங்கில் ரஜினியும் கலந்து கொண்டிருக்கிறார்.
விரைவில் அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக எந்திரன் யூனிட் வெளியூர் கிளம்புகிறது. படம் முடிய இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரை அடக்கி வாசிக்க சொல்லியிருக்கிறாராம் ரஜினி. அதுதான் இந்த மவுனம். புயலுக்குமுன் அமைதி?