Publish Date: Tue, 20 Feb 2024 (10:18 IST)
Updated Date: Tue, 20 Feb 2024 (10:39 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த நிலையில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆனால் இரண்டாம் நாள் முடிவில் அவருடைய தாயார் உடல்நிலை பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரைப் பார்க்க அஸ்வின் ராஜ்கோட்டில் இருந்து சென்னை கிளம்பி சென்றார். மூன்றாம் நாளில் அவர் விளையாடவே இல்லை. அதன் பின்னர் நான்காம் நாளில் வந்து பந்துவீசி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில் நான்காம் டெஸ்ட்டில் அவருக்கு ஓய்வளிக்க படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வின் தனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க இந்த ஓய்வை வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பும்ராவுக்கும் நான்காவது டெஸ்ட்டில் ஓய்வளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.