Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கான அரையிறுதிக் கதவை பாகிஸ்தான் திறக்குமா? இன்று முக்கிய ஆட்டம்

Prasanth Karthick
திங்கள், 14 அக்டோபர் 2024 (13:46 IST)

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா அல்லது முதல் சுற்றோடு தாயகம் திரும்புமா என்பது இன்று நடக்கும் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் ஆட்டத்தில்தான் தெரிந்துவிடும்.

 

 

இந்திய அணியை அரையிறுதிக்கும் அனுப்புவதும் அல்லது தாயகம் அனுப்புவதும் பாகிஸ்தான் வசம்தான் இருக்கிறது. இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றாலும் அதன் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிடவில்லை.

 

ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் குருப் ஏ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணியோடு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.

 

இந்தியா அடுத்தடுத்து வெற்றி

 

இதில் இந்திய மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோற்று நிகர ரன்ரேட்டில் பின்தங்கியிருந்தது. ஆனால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து பிரமாண்ட வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 2 வது இடத்துக்கு முன்னேறியது. ஆனால், அரையிறுதி செல்லக்கூடிய முக்கியமான நேற்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியிடம் 9 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது.

 

இந்திய அணியின் நிகர ரன்ரேட்

 

இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணி 4 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் 0.576 என வலுவாக இருந்தது. ஆனால், ஆஸ்திரேலிய அணியிடம் அடைந்த தோல்விக்குப்பின் இந்திய அணியின் நிகர ரன்ரேட் 0.322 ஆகக் குறைந்துவிட்டது. ஆனாலும், புள்ளிப்பட்டியலில் இந்திய அணி நிகர ரன்ரேட் அடிப்படையில் தொடர்ந்து 2-வது இடத்திலியே நீடிக்கிறது.

 

4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி நிகர ரன்ரேட்டில் 0.282 என இந்திய அணியை விட பின்தங்கியே இருக்கிறது. இன்று நடக்கும் ஏ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை அந்த அணி எதிர்கொள்கிறது.

 

இந்த ஆட்டத்தில் கிடைக்கும் முடிவைப் பொருத்துதான் இந்திய அணி அரையிறுதி செல்லுமா அல்லது நியூசிலாந்து செல்லுமா அல்லது பாகிஸ்தான் செல்லுமா என்பது தெரியவரும்.

 

அதற்கான வாய்ப்புகள் என்னவென்று பார்க்கலாம்.

 

இந்திய அணி அரையிறுதி செல்லுமா?

 

இந்திய அணி அரையிறுதி செல்ல வேண்டுமென்றால், இன்று நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி கட்டாயம் தோற்க வேண்டும்.

 

 

அதேசமயம், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தால் 53 ரன்னுக்கும் குறைவான வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெல்ல வேண்டும்

 

பாகிஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் செய்தால், 11 ஓவர்களுக்குப் பிறகு வெற்றி இலக்கை அடைய வேண்டும்.

 

இவ்வாறு நடந்தால் பாகிஸ்தான் அணியின் நிகர ரன்ரேட் இந்திய அணிக்கு இணையாக உயராது. அதேநேரத்தில், நியூசிலாந்து அணியின் நிகர ரன்ரேட் இந்திய அணியைவிட தொடர்ந்து குறைவாகவே இருக்கும் என்பதால் 4 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும்.

 

நியூசிலாந்து அணிக்கான வாய்ப்பு என்ன?

 

நியூசிலாந்து அணிக்கு வாழ்வா சாவா என்பதை நிர்ணயிக்கும் ஆட்டமாக இன்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் அமையும். இந்த ஆட்டத்தில் தோற்றாலே நியூசிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேறும். அரையிறுதி செல்ல வேண்டுமென்றால், நியூசிலாந்து அணிக்கு இன்று கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

 

நியூசிலாந்து அணி தற்போது 4 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் இந்திய அணியைவிடக் குறைவாக இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்று நடக்கும் ஆட்டத்தில் நியூசிலாந்து வென்றால் 6 புள்ளிகளுடன் 2-வது இடம் பெற்று அரையிறுதி செல்லும். ஒரு வேளை தோற்றால், நிகர ரன்ரேட் அடிப்படையில் யாருக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது தீர்மானிக்கப்படும்.

 

பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கிறதா?

 

பாகிஸ்தான் அணி தற்போது 2 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் மைனஸ் -0.488 என்ற நிலையில் இருக்கிறது. ஆனாலும் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பும் பறிக்கப்படவில்லை.

 

பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல வேண்டுமென்றால், நியூசிலாந்து அணிக்கு எதிராக குறைந்தது 53 ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.

 

ஒருவேளை பாகிஸ்தான் இரண்டாவது பேட்டிங் செய்தால், நியூசிலாந்து நிர்ணயிக்கும் வெற்றி இலக்கை 10.5 ஓவரில் அடைய வேண்டும்.

 

அப்போதுதான் பாகிஸ்தான் அணி 4 புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டில் இந்திய அணியை முந்தி அரையிறுதிக்கு செல்ல முடியும்.

 

அவ்வாறு பெரிய வித்தியாசத்தில் அல்லாமல், நியூசிலாந்தை பாகிஸ்தான் அணி தோற்கடித்தால் இந்திய அணிக்கு அரையிறுதிக் கதவு திறக்கும்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எச்சரிக்கை ஆய்வுக்கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுறுத்தல்கள்..!

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது யார்?அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

சபரிமலையில் நேரடி பதிவு கிடையாது.. ஆன்லைனில் மட்டுமே: கேரள அமைச்சர் அறிவிப்பு..!

விஜய் தனது தவறை திருத்திக் கொண்டார்! கூட்டணி பற்றி இப்போ பேச முடியாது! - தமிழிசை சௌந்தர்ராஜன்!

நாளை முதல் வடகிழக்கு பருவ மழை தொடக்கம்: வானிலை ஆய்வு மைய தலைவர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments