Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் வெடிகுண்டுத் தாக்குதல், சீன தூதர் இலக்கு வைக்கப்பட்டதாக சந்தேகம்

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (09:34 IST)
பாகிஸ்தானின் கொயட்டா நகரத்தில் இருக்கும் ஒரு சொகுசு விடுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்து  இருக்கின்றனர்.

'தி செரீனா' சொகுசு விடுதியில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில், பாகிஸ்தானுக்கான சீன தூதர் இலக்கு வைக்கப்பட்டு இருக்கலாம் என செய்தியாளர்கள்  கூறுகிறார்கள்.
 
சீன தூதர், ஆஃப்கானிஸ்தான் எல்லையில் இருக்கும் பலூசிஸ்தான் மகாணத்தின் கொயட்டா நகரத்தில் இருந்தார் எனவும், சம்பவம் நடந்த போது சீன தூதர் விடுதியில் இல்லை என்றும் தெரிந்துகொள்ளமுடிந்தது.
 
பாகிஸ்தானை சேர்ந்த தாலிபன்கள் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்று இருக்கிறார்கள். ஆனால் மேற்கொண்டு எந்த விவரத்தையும் அவர்கள் குறிப்பிடவில்லை.
 
ஆஃப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இருக்கும் மலைப் பிரதேசங்களில், தாலிபன்கள் உட்பட பல தீவிரவாத இயக்கங்கள், கடந்த சில மாதங்களாக பல தாக்குதலை நடத்தி வருகின்றன.
 
தாக்குதல் நடந்த பிறகு, அது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அக்காணொளியில் தி செரீனா சொகுசு விடுதியின் கார்  நிறுத்துமிடத்தில் தீ பற்றி எரிவது தெரிகிறது.
 
கொயட்டா நகரத்தில் உள்ள 'தி செரீனா' சொகுசு விடுதி, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசு விருந்தினர்கள் தங்க வைக்கப்படுவதற்கு பெயர் போனது.
 
"வெடி மருந்துகள் நிறைந்த ஒரு கார் விடுதியில் வெடித்திருக்கிறது" என பாகிஸ்தானின் உள் துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அஹ்மத் ஏ ஆர் ஒய் என்கிற பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தி சேனலிடம் கூறியுள்ளார்.
 
தாக்குதல் நடந்த நேரத்தில், சீனாவின் தூதர் நோங் ராங் ஒரு விழாவில் இருந்தர் எனவும், அப்போது அவர் சொகுசு விடுதியில் இல்லை எனவும் கூறியுள்ளார் பாகிஸ்தானின் உள் துறை அமைச்சர் ஷேக் ரஷீத்.
 
பாகிஸ்தான் நாட்டுக்கான சீன தூதரின் கொயட்டா பயணம் வியாழக்கிழமையோடு நிறைவடையும் என பலூசிஸ்தான் மாகாணத்தின் உள் துறை அமைச்சர் ஜியாவுல்லா லங்கோ பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
 
நீண்ட காலமாக பிரிவினைவாதிகளின் தாக்குதல் நடத்தும் இடமாக இருந்து வருகிறது பலூசிஸ்தான்.
 
பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தானுக்கு விடுதலை கோருகிறார்கள் தீவிரவாதிகள். அதோடு அப்பகுதியில் வரும் சீன கட்டமைப்புத் திட்டங்களையும் அவர்கள்  எதிர்க்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments