Publish Date: Thu, 05 Jun 2014 (17:51 IST)
Updated Date: Fri, 06 Jun 2014 (11:30 IST)
யோகாவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள யோகி தி.ஆ.கிருஷ்ணன் 'உங்கள் ஆரோக்கிய நலவாழ்வு' என்ற யோகாசனம் குறித்த புத்தகத்தை எழுதியுள்ளார். இதில், யோகாசனத்தின் பல நிலைகளையும், அதன் பயன்களையும் யோகாசனப் படங்களுடன் தொகுத்து அளித்துள்ளார். பல்கலைக்கழக பாடத்திட்டத்தின்படி வெளிவரும் முதல் நூல் என்ற குறிப்புடன் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
இப்புத்தகத்திற்கு தமிழ்நாடு மாநில யோகாசன சங்கத்தின் தலைவர் ஆசனா ஆர்.ஆண்டியப்பன் மதிப்புரை எழுதியுள்ளார்.
இனி, இப்புத்தகத்தில் அடங்கியுள்ள விவரங்களை உங்களுக்காக தொடர்ச்சியாக அளிக்கிறோம்...
யோகத்தில் யோகம்!
இயல்பாகவே சுகத்தையும், அறிவையும் பெற விரும்பும் மனிதன் அதைப்பெற காலத்தோடு உழைப்பைச் செய்வதில்லை. இது நடைமுறைக்குப் பொருந்தாத சீர்கேடான ஓர் எண்ணமாகும். ஆனால் நல்ல கொள்கைகளைச் சென்று அடைய, கடைப்பிடிக்கும் வழிமுறைகளும் நேர்மையுடையதாக இருக்க வேண்டும். உலகியலில் நடைமுறை வாழ்க்கையிலேயே இப்படி என்றால், எக்காலத்தும் நீங்காத இன்பத்தைத் தரும் இறைநிலையை அடைவது எப்படி? சற்றே சிந்திப்போம். மேலும் இந்த நிலையை அடையப் பல வழிகள் இருக்கின்றன. அவை மனிதனின் இயல்புக்குத் தக்கவாறு 8 விதமானவை அவை.
1. ராஜயோகம்
2. ஹடயோகம்
3. கர்ம யோகம்
4. ஞான யோகம்
5. பக்தி யோகம்
6 மந்திர யோகம்
7. கீதயோகம்
8. வேள்வி யோகம்
என்பனவாகும்.
இறையின் இயற்கை நிலைக்கு அடுத்தபடி உயர்ந்த நிலையில் உள்ளது மானிடப் பிறவி.
பூவுலகில் எல்லா உயிர்களையும் விடச் சிறந்த பிறவி மனிதப் பிறவியே. மனிதராய்ப் பிறந்த எவருமே அறிவு, அழகு, ஆரோக்கியம் முதலியவற்றை விரும்பாமல் இருக்கமாட்டார்கள் எனலாம். பண்டைக் காலந்தொட்டே இம்மூன்றையும் ஒருங்கே பெற மனிதன் எல்லாவித விஞ்ஞான முயற்சிகளையும் செய்து வருகிறான். ஆனாலும் திட்டவட்டமான முடிவுகள் கிடைத்தபாடில்லை. இந்நிலையினால் இந்திய ரிஷிகள், முனிவர்கள், யோகிகள் பக்கம் பார்வையைத் திரும்பியிருக்கிறார்கள் மேலைநாட்டினர்.
உடல், மனம், அறிவு மூன்றும் உன்ன நிலையில் மேம்பட வாழ்ந்தவர்கள் இந்திய யோகிகள், முனிவர்கள், ரிஷிகளே. இவர்களின் வாழ்க்கையே முன்னுதாரணமாய்த் திகழ்வதுடன் இவை பற்றிய எண்ணிறந்த நூல்களையும் அவர்களையும் எழுதி வைத்துள்ளார்கள். அவை,
1. யோக சூடாமணி, 2. யோககுண்டலினி, 3.உபநிஷத், 4. தியானபிந்து, 5. பதஞ்சலி யோகசூத்திரம், 6. யோகோபநிஷத், 7. ஹடயோக தீபிகை, 8. சிவசங்கீதை, 9. சித்தாந்தசாராவளி, 10. யோக பீஜம், 11. ஞானவஸிஷ்டம், 12. மண்டூகஉபநிஷத், 13. சேகரண்ட சம்ஹிதை, 14. சிவபோகசாரம், 15. தத்துவபிரகாசம், 16. யோகசாரம், 17. யோகவசிஸ்டம், 18. திருமந்திரம் போன்ற பல நூல்களாகும்.
பகவத் கீதை, இராமாயண இலக்கியத்திலும் ஓரளவு பகுதியாக யோகம் வருகிறது. மனிதனுடைய உடல், மனம், அறிவு இம்மூன்றும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களையும், பயனையும் போல் அமைந்துள்ளது. அதுபோன்றதே ஹடயோகமும். ஆகவே ஹடயோகக் கலையை எட்டு விதமான நிலையில் விளக்கமாக் கூறுவர். அவை,
1. இயமம்
2. நியமம்
3. ஆசனம்
4. பிரணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி
எனப்படும்.
ஆகவே ஹடயோகம் என்கிற அட்டாங்க யோகத்திற்கு இப்படி ஒரு புதுமையான பொருத்தம் இருப்பதை யாரும் உணர்வதில்லை. ஹடயோகம் என்றாலே 'ஹ' என்ற எழுத்து உடம்பு என்றும், ட என்ற எழுத்து மூச்சு என்றும் பொருள்படும். மேலே சொன்னவை நூல் கருத்தானாலும் மனித சரீரம் எட்டுவிதப் பிரிவுகளால் ஆனது. அவை,
1. தோல்
2. சதை
3. எலும்பு
4. முடி
5. மஜ்ஜை
6. நரம்பு
7. இரத்தம் - செந்நீர் - உதிரம் - வெண்ணீர் (விந்து). இந்த ஏழுடன் 8. மனமும் ஒன்றாக இணைந்து இயங்கச் செய்கிறது என்பதாம்.
இனி அட்டாங்க யோகங்களின் விளக்கத்தைக் காண்போம்.
1. இயமம்
மனதாலும் பேச்சாலும் செயலாலும் எவ்வுயிரையும் துன்புறுத்தாமல் இருத்தல், மனத்தாலும் செயலாலும் பேச்சாலும் பிறர் பொருளைக் கவராமல் இருத்தல், உள்ளத்தாலும் பேச்சாலும் செயலாலும் முழு பிரம்மச்சரியம் கடைப்பிடித்தல், உள்ளத்தாலும் பேச்சாலும் செயலாலும் உண்மையைக் கடைப்பிடித்தல், பிறரிடமிருந்து யாசகம், பரிசு போன்றவை பெறாது இருத்தல்.
2. நியமம்
உடலும் உள்ளமும் சுத்தமாய் இருக்க வேண்டும். சாத்வீக உணவு (இயற்கையான காய்கனி, கீரை சாலச் சிறந்தது) உண்டு வாழ்தல், அதிகாலையில் காலைக் கடன்களை முடித்துக் குளிர்ந்த நீரில் குளித்தல், உள்ளத்தூய்மைக்கு வாக்காலும், செயலாலும் உண்மையைக் கடைப்பிடிப்பதுடன் (சத்கிரியா முறையிலும் உடலைச் சுத்தம் செய்தல்), பொறாமை வெறுப்புகளை நீக்குதல், எதிலும் திருப்தி அடைதல், சந்தோஷம் கோபம் துக்கம் இவைகளிலும் மனதைச் சமமாய் வைத்திருத்தல்.
Ravivarma
Publish Date: Thu, 05 Jun 2014 (17:51 IST)
Updated Date: Fri, 06 Jun 2014 (11:30 IST)